தீபாவளி பர்சேஸ்க்கு தி நகர் கிளம்பிட்டீங்களா? திருடர்களிடம் ஜாக்கிரதை!: எச்சரிக்கும் போலீஸ்
சென்னை: தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னையில் கடைவீதிகளில் வியாபாரம் மும்முரமாக நடைபெறுகிறது. புத்தாடைகள், தங்க நகைகள் வாங்குவதற்கு தியாகராய நகர்,புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் தினமும் லட்சக்கணக்கில் வருகின்றனர். இதைப் பயன்படுத்தி திருட்டு, தங்க நகைகள் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் காவல் துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயநகரில் தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடுபவர்களைப் பிடிக்க 225 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை பாதுகாப்பு
தியாகராயநகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜார், பனகல் பூங்கா, பர்கிட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 3 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு அறை
பாதுகாப்புப் பணியை சீராக மேற்கொள்வதற்கு தாற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறையை 044-23452608 என்ற தொலைபேசி எண் மூலமும், 94981 00176 என்ற செல்போன் எண் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தி. நகர் ரங்கநாதன் தெரு
அதிக நெரிசல் இருக்கும் ரங்கநாதன் தெருவுக்குள் மக்கள் செல்வதற்கு ஒரு பாதையும், அங்கிருந்து வெளியே வருவதற்கு மற்றொரு பாதையும் என இரு வழிப் பாதையை போலீசார் அமைத்துள்ளனர். மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடுபவர்களைக் கைது செய்வதற்கு பல்வேறு வியூகங்களை காவல் துறை வகுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு காவல் துறை சார்பில் 13 அறிவுரைகள் அடங்கிய 10 ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும் தியாகராயநகர் முழுவதும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில், 200 விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மாறுவேடத்தில் போலீஸ்
இதற்காக குற்றப் பிரிவைச் சேர்ந்த 30 போலீஸார் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் மாறுவேடத்தில் ரோந்து வருகின்றனர். இவர்கள், சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிபவர்களைப் பிடித்து வருகின்றனர். திருடர்களைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் தலா 10 பெண் போலீசார் தங்க நகைகளை அணிந்து மாறுவேடத்தில் சுற்றி வருகின்றனர். இவர்கள் மூலம் திருடர்களைக் கைது செய்வதற்கு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்
ரங்கநாதன் தெரு, பனகல் பூங்கா உள்ளிட்ட முக்கியமான கடைகள் இருக்கும் பகுதிகளில் 225 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 50 கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கும் வசதியைக் கொண்டவை. இந்தக் கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணினி சர்வரில் ஏற்கெனவே திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். ஆதலால், தியாகராயநகருக்குள் ஏற்கெனவே திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர் வந்தால், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் காவலர்களை எச்சரிக்கை செய்யும். இதற்காக அந்தக் கணினியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சுமார் 200 புகைப்படங்களை போலீசார் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்தக் கண்காணிப்பு கேமராக்களை கண்காணிப்பதற்கு தனியாகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
10 பேர் கைது
அதோடு, கண்காணிப்புக் கோபுரங்களில் கூட்டத்தைக் கண்காணிக்க 10 நவீன ரக பைனாகுலர்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பைனாகுலர்கள் மூலம் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை நடைபெறும் காட்சிகளைத் துல்லியமாகக் காண முடியும். தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தியாகராயநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தியாகராயநகரில் திருட்டுச் சம்பவங்கள் பெருமளவு நடைபெறாமல் தடுக்கப்பட்டு வருவதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக மையங்களில் கண்காணிப்பு
இதேபோல், புரசைவாக்கத்தில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஹோட்டல் சந்திப்பு, வெள்ளாளர் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் 100 போலீஸார் துணை ஆணையர் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் 3 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வண்ணாரப்பேட்டையில் 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 60 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேளச்சேரி, தாம்பரத்திலும் காவல் துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.