தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? சென்னையில் இருந்து அக்.17ல் சிறப்பு ரயில் கிளம்புது!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 17ஆம் தேதி காலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்க முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில் இயக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊரை விட்டு வந்து சென்னையில் தங்கி பணிபுரிகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விஷேச தினகங்களில் சொந்த ஊர் சென்று உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
சொந்த ஊர் செல்ல அதிகம் பயன்படுத்துவது ரயில்களைத்தான். 120 நாட்களுக்கு முன்பிருந்து ரிசர்வேசன் செய்து விட்டு பண்டிகை நாட்களை எண்ணிக்கொண்டிருப்பார்கள். அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வரும் 16ஆம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய தினங்களில் சொந்த ஊருக்குச் செல்ல பஸ் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால், அரசு ஒவ்வோர் ஆண்டும் கூடுதலான சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது.
இந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு அதிகம் கட்டணம் கொண்ட சுவீதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே சாதாரண கட்டண ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையேற்று வரும் 17ஆம் தேதி காலை 7 மணிக்கு எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து இருந்து சென்னைக்கு 20-ம் தேதி காலை 7.20 மணிக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.