தீபாவளி: சென்னை- கோவை இடையே சிறப்பு ரயில்கள்.. ஆனால் கட்டணமோ பல மடங்கு ஜாஸ்தி!
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை-கோவைக்கு வரும் 28ம் தேதி பல மடங்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் ஒரு பக்கம் அதிர்ச்சியை அளித்த நிலையில் தெற்கு ரயில்வேயும் பலமடங்கு சிறப்பு கட்டண ரயில்கள் அறிவித்து பயணிகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். ரயிலில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் செய்யப்படுவதால் டிக்கெட்டுக்காக காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை 300க்கும் மேல் உள்ளது.
இந்த பயணிகள் நம்பியிருந்தது சிறப்பு ரயில்களை மட்டுமே. ஆனால் சிறப்பு ரயில்கள் அனைத்து பல மடங்கு கட்டண சிறப்பு ரயிலாக உள்ளது என்பதான் வேதனை. இந்த ரயில்களில் பயணிக்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். அதே நேரத்தில் சொந்த ஊருக்கு எப்படியாவது போக வேண்டும் நினைப்பவர்கள் பல மடங்கு செலவு செய்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோவைக்கு சிறப்பு ரயில்
தீபாவளியை முன்னிட்டு சென்னை-கோவைக்கு வரும் 28ம் தேதி பல மடங்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அந்த ரயில்(06028) வரும் 28ம் தேதி அன்று பிற்பகல் 3 மணி அளவில் எழும்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 30ம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு பல மடங்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில்(06027) எழும்பூருக்கு இயக்கப்படும். இந்த ரயில் ஏற்கனவே ஈரோடு வரை இயக்கப்படும் நிலையில் தற்போது கோவை வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்ட ரயில்கள்
திருச்சியில் இருந்து எழும்பூருக்கு 29ம் தேதி 06026 எண் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் மதியம் 3.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அதே நாளில் இரவு 9.10 மணிக்கு எழும்பூர் வந்து சேரும். அதேபோல 06025 தடம் எண் கொண்ட ரயில் சென்னை எழும்பூர்- திருச்சி இடையே இயக்கப்படுகிறது.
இது 31ம் தேதி எழும்பூரில் இருந்து 9 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30க்கு திருச்சி சென்று சேரும்.
சுவீதா ரயில்கள்
சென்னை-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து 29ம் தேதி இரவு 10.45க்கு புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். திருநெல்வேலி-சென்னை சுவிதா சிறப்பு ரயில் 30ம் தேதி மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு மறுநாள் காலை 7.20க்கு எழும்பூர் வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்தான் அதிகம்
அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கும் சுவீதா ரயில்களில் எந்த வித வசதியும் கூடுதலாக இருக்காது என்பதுதான் கொடுமை. சில நேரங்களில் தண்ணீர் கூட வருவதில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ரயில்வே துறை அதற்கேற்ப வசதிகளையும் அதிகரிக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை. பண்டிகை தினத்திற்கு முதல்நாளிலும் பண்டிகை முடிந்த பின்னரும் முன்பதிவு செய்யப்படாத ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.