தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? ரெடியா இருங்க ஜூன் 18 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
சென்னை: ஜூன் 18-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 18ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், வரும் 18 முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது.
சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தீபாவளி சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வேலை நிமித்தமாக வெளியூரில் வேலை பார்ப்பவர்கள், தங்களின் சொந்தபங்தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு செல்கிறார்களோ இல்லையோ, நிச்சயமாக ஆண்டுதோறும் தீபாவளிக்கு கண்டிப்பாக ஊருக்கு போயே ஆவார்கள்.
காரணம், வெளியூரில் வேலை செய்பவர்கள், தங்களின் அலுவலக கஷ்டங்களை அந்த ஒரு நாளில் மறந்து நாள் முழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதால் தான். இதற்காகவே, அந்த திருநாளுக்காகவே ஆண்டு முழுவதும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால், தீபாவளிப் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுவது வாடிக்கையான நிகழ்வாகும்.