10 நிமிடங்களுக்குள் முடிவடைந்த தீபாவளி டிக்கெட் புக்கிங்.. ரயில் பயணிகள் ஆதங்கம்
Recommended Video
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் ஆர்வமோடு காத்திருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், 7 நிமிடங்களில் முன்பதிவு முடிவடைந்தது.
ரயில்களில், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இவ்வாண்டு, நவம்பர் 6 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், தீபாவளியையொட்டி ஊருக்கு செல்வோர் இன்றிலிருந்து புக்கிங் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
நவம்பர் 2ம் தேதி, ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றும், நவம்பர் 3ல் பயணம் செய்ய விரும்புவோர் நாளையும் முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 4ம் தேதி செல்ல விரும்புவோர் வரும் 7ம் தேதியும், 5ம் தேதியில் ஊருக்கு செல்ல விரும்புவோர் 8ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
நவம்பர் 2 ம் தேதி செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில், 7 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிவடைந்தது.
டிக்கெட் முன்பதிவிற்காக தெற்கு ரயில்வே சார்பில் 250 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர ஆன்லைன் மற்றும் நேரில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென் மாவட்டங்களுக்கு செல்ல அதிக அளவிலான மக்கள் முன்பதிவு செய்தததாகவும், எனவே விரைந்து டிக்கெட் முன்பதிவு முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் தெற்கு ரயில் சிறப்பு ரயில்களை இயக்கும் என தெரிகிறது.