ஆம்னி பஸ் கட்டணத்தை ஏன் நீங்க நிர்ணயிக்கலை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் குட்டு!
சென்னை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்காதது ஏன் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது, மேலும் கட்டணம் தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளிக்கான பயணக் கட்டணம் குறித்த ஆம்னி பேருந்துகள் அமைப்பின் அறிவிப்பு மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து வெளியான செய்திகளை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்தது.
நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கல்யாணசுந்தரம் (வடக்கு), பாஸ்கரன் (மத்தி) ஆகியோர் ஆஜராகி, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக அரசாணை எதுவும் இல்லை. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ற வகையில் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்கின்றனர்.
இந்த கட்டணத்தைக் காட்டிலும் பண்டிகை காலங்களில் அதிகமாக வசூலிப்பது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகிறோம். ஆயுத பூஜையின்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது விதிமீறல்கள் தொடர்பாக 167 பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கட்டண நிர்ணயம் தொடர்பான அரசாணை இல்லாத காரணத்தால் முறையான நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று தெரிவித்தனர்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஒவ்வொரு பண்டிகை காலங்களின்போதும் ஆம்னி பேருந்துகள் ரூ.400 முதல் ரூ.1500 வரை கட்டணம் நிர்ணயிக்கின்றன. தற்போது தீபாவளிக்கு புதிய கட்டண அட்டவணையை ஆம்னி பேருந்து அமைப்புகள் வெளியிட்டுள்ளன. இதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது யார்? இதனால் வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பிற மாநிலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ள நிலையில், தமிழக அரசு ஏன் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலர் மற்றும் போக்குவரத்து துறைச் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 19ம் தேதி இன்று ஒத்திவைத்தனர்.