அவதூறு வழக்கை எதிர்கொள்வதாலேயே ஒருவர் கிரிமினல் பின்னணி கொண்டவர் அல்ல...: சென்னை ஹைகோர்ட்
சென்னை: கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவரை குற்றப் பின்னணி கொண்ட நபராக கருதக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ப்ரீலேன்ஸ் பத்திரிகையாளர் எம்.நெடுஞ்செழியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், சட்டப்படிப்பை முடித்து விட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பம் செய்தேன். ஆனால் என் மீது கிரிமினல் அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி என் விண்ணப்பத்தை பார் கவுன்சில் நிராகரித்து விட்டது. எனவே பார் கவுன்சில் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் பிறப்பித்த உத்தரவு விவரம்:
அவதூறு வழக்கு என்பது கிரிமினல் குற்ற வழக்காக கருதக்கூடாது என்று சர்வதேச அளவில் சட்ட அறிஞர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்தினை உச்சநீதிமன்றமும் பரிசீலித்து வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சட்ட ஆணையம், ஊடகம் சட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூட, இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவு 499 (கிரிமினல் அவதூறு) என்பது சர்வதேச விதிமுறைக்கு எதிராக உள்ளது என்று கூறியுள்ளது.
மேலும் இந்த சட்டப்பிரிவின் கீழ் அபராதத்துடன் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிப்பது சரியானதாக இல்லை என்றும் கூறியுள்ளது. அதேபோல இதுபோன்ற தண்டனை என்பதே கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று சர்வதேச சட்ட ஆணையத்தின் மன்னிப்பு சபையும் கருத்து தெரிவித்துள்ளது.
இதே கருத்தை சர்வதேச மனித உரிமை குழுவும் வலியுறுத்தி வருகிறது. இதனால் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் கிரிமினல் அவதூறு சட்டப்பிரிவுகளை மாற்றி அமைத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் மனுதாரர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, அவரை குற்ற பின்னணி கொண்ட நபர் என்று கூற முடியாது.
குற்ற பின்னணி கொண்ட நபர்களை வழக்கறிஞராகப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தாலும், கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவரை குற்ற பின்னணி கொண்ட நபராக பார் கவுன்சில் கருதக்கூடாது. எனவே மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்த பார் கவுன்சில் உத்தரவை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.