கமல், விஜய் டிவி மீது 100 கோடிக்கு அவதூறு வழக்கு போடுவேன்... கொந்தளிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி
சேரி பிஹேவியர் கருத்துக்கு கமலும், விஜய் டிவி நிர்வாகமும் மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என்று புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னை: சேரி பிஹேவியர் என்று காயத்ரி பேசியதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்துள்ளார்.
விஜய் டிவி நிர்வாகம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மீது ரூ.100 கோடிக்கு அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இழிவுபடுத்தக்கூடாது
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சாதி, மதம், மொழி, பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் யாரையும் இழிவுபடுத்தி பேசக்கூடாது என்பது பொதுவான நியதி.
அவமானப்படுத்தக்கூடாது
இந்தியாவில் இருக்கும் சில மக்கள் சேரியில் வாழ்வது அவர்களது குற்றமல்ல. அவர்கள் சேரியில் வாழ்வதற்கு நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டுமே தவிர, அதனை அவமானப்படுத்தக்கூடாது.
மன்னிப்பு கேட்கணும்
விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒருவர் சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறான செயல். இதற்கு விஜய் தொலைக்காட்சி நிர்வாகமும், கமல்ஹாசனும் சேரி பிஹேவியர் என்று பேசியதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரூ. 100 கோடி அவதூறு வழக்கு
இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். மேலும், அந்த தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மீது ரூ.100 கோடிக்கு அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
காயத்ரி கருத்து
விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரி, ஓவியாவைப் பார்த்து சேரி பிஹேவியர் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தாயார் மன்னிப்பு
சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர், காயத்ரி மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், காயத்ரிக்குப் பதிலாக அவரது தாயார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
கமலுக்கும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்தார் கமல்.
கிருஷ்ணசாமி கொதிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டியளித்த டாக்டர் கிருஷ்ணசாமி, 'சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு கமல் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக தெரிவித்தார்.
கமல் விளக்கம் அளிப்பாரா?
இந்த நிலையில் கோவையில் பேசிய கிருஷ்ணசாமி, கமலுக்கு தான் கொடுத்த இரண்டு நாட்கள் கால அவகாசம் முடிந்துவிட்டதாக கூறியதோடு கமல்ஹாசன், காயத்ரி மற்றும் விஜய் டிவி ஆகியோர்கள் மன்னிப்பு கேட்காததால் ரூ.100 கோடி அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு கமல்ஹாசன் வரும் சனி, ஞாயிறு அன்று நிகழ்ச்சியில் விளக்கம் அளிப்பாரா என்பதை பார்க்கலாம்.