அவதூறாக பேசினால் அரசு வழக்கு தொடரும்.. சட்டசபையில் விஜயதாரணிக்கு அமைச்சர் பதில்
சென்னை: அவதூறாக பேசினால் அரசு சார்பில் வழக்குத் தொடரப்படும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி (காங்.), பேசுகையில், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பேசியதாவது: தமிழக அரசு குறித்து அவதூறாக பேசினால் வழக்குத் தொடரப்படும். அதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதுதான்.
விஜயதாரணி மீது அவதூறு வழக்கு இருப்பதால், அவரது இந்த கோரிக்கையை பொது கோரிக்கையாக வைக்க முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், "உறுப்பினர்கள் தங்களுக்கான நேரத்தில், ஆளுநர் உரை குறித்து மட்டுமே பேச வேண்டும். நீதிமன்ற விவகாரங்களை விவாதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று அறிவுறுத்தினார்.