சென்னைக்கு வெளியே ஒரு 'போர் மேகம்'... கண்களை விரிய வைக்கும் ராணுவ வீரர்களின் சாகசங்கள்!
போரின் போது நமது ராணுவ வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை விவரிக்கும் விதமாக சென்னை அருகே ராணுவ கண்காட்சியில் வீரர்கள் நிகழ்த்திக்காட்டிய சாகச காட்சிகள் வியக்க வைத்தன.
Recommended Video
சென்னை: போரின் போது நமது ராணுவ வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை விளக்கிக் காட்டும் விதமாக சென்னை அருகே நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி டாங்கிகளின் சாகச காட்சிகள் செய்து காட்டப்பட்டன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ராணுவ கண்காட்சியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிடந்தையில் 2 லட்சத்து 90 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. ராணுவ டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ரூ. 800 கோடி செலவில் நடைபெறும் இந்த கண்காட்சியில் கண்ணிவெடிகளை அகற்றும் பீரங்கிகள், நவீன ரக பீரங்கிகளின் செயல்பாடுகளும் செய்முறை விளக்கங்களாக காட்டப்படுகின்றன. ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பலவும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுன்ன. அந்நிய செலாவணியை அதிகரிக்கும் வகையில் கண்காட்சியையொட்டி தொழில் நிறுவனங்கள் சார்பில் கருத்தரங்கங்களும் நடைபெற்று வருகின்றன.
குட்டிக்கரணம் போட்ட ஹெலிகாப்டர்கள்
கண்காட்சியில் முப்படை வீரர்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடத்தி காட்டப்படுகின்றன. வானில் வட்டமடித்து வரும் ஹெலிகாப்டர்கள், ஹெலிகாப்டர் தரை இறங்க முடியாத இடங்களில் வீரர்கள் எவ்வாறு துரிதமாக செயல்பட்டு தாக்குதல் நடக்கும் இடத்தை அந்தரத்தில் இருந்து கயிறு மூலம் இறங்கி அடைவார்கள் என்பன விளக்கிக் காட்டப்பட்டன.
இலக்கை துள்ளியமாக தாக்கும் டாங்கிகள்
இதே போன்று போர்க்கப்பல்கள் செயல்படும் விதம், ராணுவ டாங்கிகள் எவ்வாறு எதிரிகளின் இலக்கை தாக்கி அழிப்பதற்காக செயல்படுத்தப்படும் உள்ளிட்டவையும் நிகழ்த்திக் காட்டப்பட்டன. பாராசூட்டில் வீரர்கள் தரையிறங்குவது, ஹெலிகாப்டர்களின் விண்ணை அதிர வைக்கும் சத்தங்கள் என ராணுவ கண்காட்சி நடைபெறும் இடம் மினி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.
பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்
இந்த ராணுவ கண்காட்சியை பொதுமக்கள் இறுதிநாளான ஏப்ரல் 14ம் தேதி கண்டு களிக்கலாம். எனினும் ராணுவ கண்காட்சியை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் 2 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளனன. இதனை வருகிற 13-ந்தேதி மற்றும் 15-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் பொதுமக்கள் பார்க்கலாம்.
துறைமுகத்தில் பார்வைக்கு உள்ள போர்க்கப்பல்
இதற்காக தீவுத்திடலில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்கள் அங்கிருந்து பஸ்கள் மூலம் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை போர்க்கப்பல்களை பார்க்கலாம். இதேபோல் வருகிற 13-ந்தேதி, 14-ந்தேதிகளில் பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.