புதிய ராணுவ தளபதி தல்பீர் சிங் நியமனத்தில் மாற்றமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்!
சென்னை: புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமனம் இறுதியானது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள விக்ரம் சிங் ஜூலை மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். ராணுவ விதிமுறைப்படி நடப்பு தளபதியின் ஓய்வு தேதிக்கு இரண்டு மாதத்துக்கு முன்பே புதிய தளபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதையடுத்து, இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுகாகை நியமிக்க முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஆட்சி முடிவடையும் தருவாயில் மன்மோகன் அரசு அவசர அவசரமாக இந்த நியமனத்தை மேற்கொண்டது ஏன் என்ற சர்ச்சை எழுந்தது.
மேலும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ''அடுத்த ராணுவ தளபதி நியமனத்தை ஒத்தி வைக்க வேண்டும். ஆட்சியைவிட்டு வெளியேற உள்ள அரசு அடுத்த ராணுவ தளபதியை நியமிக்க கூடாது. இது தொடர்பான முடிவை எடுக்கும் விவகாரத்தை அடுத்து ஆட்சிக்கு வரும் அரசிடம் விட வேண்டும்'' என கூறியிருந்தார்.
இதற்கிடையே, முன்னாள் ராணுவ தளபதியும், பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி துறைக்கான மத்திய இணை அமைச்சராகவும் ஆகியுள்ள வி.கே.சிங், புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக்கை நியமிக்க ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
தல்பீர் சிங் சுஹாக், ராணுவத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர். அவருக்கு பதவி உயர்வு வழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் 2012ஆம் ஆண்டு பிக்ரம் சிங் ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின் இந்த தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் கட்சி, புதிய ராணுவ தலைமை தளபதி நியமன விவகாரத்தில் மத்திய அரசின் நிலைக்கு மாறான கருத்தை தெரிவித்துள்ள வி.கே சிங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இதனைத் தொடர்ந்தே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக எழுந்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமிக்கப்பட்டதில் அரசியல் கருத்துவேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும், அவரது நியமனம் இறுதியானது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.