சென்னையில் போர்க்கப்பலை பார்க்க திரண்ட மக்கள் - சல்யூட் அடித்து வரவேற்ற கடற்படை வீரர்கள்
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போர் கப்பல்களை வரும் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை: திருவிடந்தையில் நடைபெற்று வரும், இந்திய ராணுவ பாதுகாப்பு கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக 4 போர்க்கப்பல்களை 15ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.
மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் கடந்த 11ஆம் தேதி மத்திய பாதுகாப்பு துறையின் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியது. 12ஆம் தேதியன்று வர்த்தக அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்து முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
ராணுவ கண்காட்சியையொட்டி வந்துள்ள அரவிந்த், ஷயாத்ரி, சுமத்ரா, ஹமோர்தா ஆகிய 4 போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை 3 தினங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பொது மக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி போர்க்கப்பலை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
சென்னையில் போர்கப்பல்
இந்த போர்க்கப்பல்களை பார்வையிட விரும்பும் பொதுமக்கள், சென்னை தீவுத்திடலில் தங்களின் ஆதார் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை ஒன்றின் நகல் மற்றும் ஒரிஜினலுடன் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் அங்கிருந்து பேருந்துகள் மூலம் சென்னை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பள்ளி மாணவர்கள்
பள்ளிகளில் இருந்து மொத்தமாக சீருடையில் அழைத்து வரும் மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பாதுகாப்பு காரணம் கருதி 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்றும், கேமரா, உணவு பொருட்கள், கைப்பைகளும் கொண்டு வர அனுமதியில்லை. பொதுமக்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கடற்படையினர் வரவேற்பு
பொதுமக்கள் கப்பலில் ஏறி உள்ளே செல்லும் போது, கப்பற்படை வீரர்கள் சல்யூட் அடித்து இன்முகத்துடன் வரவேற்றனர். மேலும் கப்பல்களில் பொதுமக்களுக்கு ஜூஸ் வழங்கப்பட்டது. ராக்கெட் லாஞ்சர்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கப்பற்படை வீரர்கள் பொதுமக்களுக்கு விளக்கினார்கள். சுமித்ரா, ஷயாத்ரி, கமோர்டா, ஐராவத் ஆகிய 4 போர்க் கப்பல்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
போர்க்கப்பலில் செல்ஃபி
போர்க்கப்பல்களில், கப்பற்படை வீரர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து புகைப்பட விளக்கங்கள் வைக்கப்பட்டிருந்தன. குடும்பத்துடனும், உறவினர்களுடனும் கண்டு மகிழ்ந்தவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் 4 போர்க்கப்பல்களையும் பார்த்து முடித்த பின்னர், சென்னை துறைமுகத்தில் இருந்து மீண்டும் பேருந்துகள் மூலம் தீவுத்திடலில் கொண்டு விடப்பட்டனர்.
ஆர்வத்துடன் திரண்ட மக்கள்
போர்க்கப்பலை பார்க்க ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அதிகமாக வந்ததால் மேலும் சில தினங்களுக்கு பார்வையிட பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 15ஆம் தேதிவரை பொதுமக்கள் பார்வையிட துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.