நெல்லை மாவட்டத்தில் மாறிய பருவநிலை- மக்கள் கடும் அவதி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மாறிவரும் பருவநிலையால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
பருவமழையும் குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை குறைந்த அளவே பெய்துள்ளதால் அணைகள் நிரம்பவில்லை என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தொடர்ந்து விட்டு விட்டு சாரலும், இதமான தென்றல் காற்றும் வீசும். அதனை அனுபவிக்கவே ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுத்து வருவர். இந்த ஆண்டு சரியான நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.
வடகிழக்குப் பருவமழை
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சரியான அளவில் பெய்யவில்லை. இதனால் அணைகள் நிரம்பவில்லை. கடந்த இரண்டு மாதமாக ஒரீரு நாள் தவிர மற்ற நாட்களில் மழையே பெய்யவில்லை. டிசம்பர் மாதமாவது மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் ஏமாற்றிவிட்டது.
கடும் பனிப்பொழிவு
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை டிசம்பர் மாதம் என்பதால் பருவநிலை மாறி உள்ளது. மழை குறைந்து பனிப்பொழிவு தான் அதிகமாக உள்ளது.
முடங்கிய மக்கள்
இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் பனி அதிகாலை 6 மணி வரை போட்டு தாக்குவதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அதிகாலை வேளையில் கடும் பனி நிலவுவதால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால் வாகன விளக்குகளை போட்டவாறே செல்கின்றனர்.
பகலில் வெப்பம்
ஆனால் பகல் பொழுதோ அதற்கு நேர் மாறாக உள்ளது. காலை 7 மணிக்கு சூரியன் உதித்ததும் பனி காணாமால் போய் விடுகிறது. மாலை 5 மணி வரை வெப்பம் நிலவுகிறது.