சசிகலா சபதம் போல காயத்ரி சபதமும் பிளாப் ஆயிருச்சே
சசிகலா போட்ட சபதம் எப்படி பணால் ஆகிவிட்டதோ அதே போல தெய்வமகள் சீரியலில் காயத்ரி போட்ட சபதமும் பணால் ஆகிவிட்டது.
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியல் 1215 எபிசோடுகளை கடந்தும் காயத்ரியின் சீற்றம் குறையவில்லை. கொளுந்தன் பிரகாஷையும், ஒரகத்தி சத்யாவையும் பழிவாங்க வேண்டும் என்ற அதே வேகத்தோடு மறுபடியும் ஒரு சபதம் போட்டிருக்கிறாள்.
ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் இருந்து அனைவரையும் விரட்டுவேன் என்று காயத்ரி போட்ட சபதம் அட்டர் பிளாப் ஆன நிலையில் இந்த சபதத்தை நிறைவேற்ற இன்னும் என்னென்ன செய்யப் போகிறாளோ என்பதுதான் வரும் எபிசோடுகளின் கதை.
ஜெய்ஹிந்த் விலாஸ் வீடு
காந்தி வந்த ஜெய்ஹிந்த் விலாஸ் வீடு மீது மூத்த மருமகள் காயத்ரிக்கு கண். அதை தனதாக்கிக் கொள்ள அவள் செய்யும் தகிடுதத்தங்கள் தான் கதை. மாமனார் மாமியாரை வேலை வாங்கியது தொடங்கி, கொழுந்தன்களையும், அவரது மனைவிகளையும் வேலைக்காரிகள் போல நடத்தியது வரை அனைத்துமே வில்லத்தனம்.
விரட்டிய குமார்
காயத்ரியின் வில்லத்தனங்கள் அறிந்து அவளை விவாகரத்து செய்கிறான் குமார். இரண்டாவது திருமணமும் செய்து கொள்கிறான். ஆனால் அந்த வாழ்க்கையை கெடுத்து தான் மீண்டும் குமாருடன் வந்து ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் வாழ்வேன் என்று சபதம் போடுகிறாள் காயத்ரி.
பிளாப் ஆன சபதம்
காயத்ரியின் சபதத்தை வழக்கம் போல பிரகாஷ் முறியடித்து அண்ணன் குமாரை, அண்ணி அகிலா உடன் சேர்த்து வைக்கிறான். காயத்ரி வழக்கம் போல போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்கிறாள். ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் நடப்பதை தனது அக்காவிற்கு போன் மூலம் சொல்ல, காயத்ரி கண்ணீர் விடுகிறாள். அடடே சசிகலா சபதம் போல காயத்ரி சபதமும் பிளாப் ஆயிருச்சே என்பது இல்லத்தரசிகளின் குறைந்த பட்ச சந்தோசம்.
சிக்கிக் கொண்ட மூர்த்தி
தன்னை கடத்தி கொலை செய்ய முயன்ற மூர்த்தியையும், ஏகாம்பரத்தையும் துப்பாக்கி முனையில் பிடித்து கட்டி வைத்திருக்கிறாள் காயத்ரி. அவர்கள் இருவரும் இப்போது லிங்கத்தின் பிடியில் இருக்கிறார்கள். இருவரையும் காணவில்லை என்று புகார் கொடுக்க, அவர்களை கண்டுபிடிக்க ஒரு திட்டம் போடுகிறான் பிரகாஷ்.
அடங்காத காயத்ரி
குமாரும் தனக்கு கிடைக்க வில்லை, ஜெய்ஹிந்த் விலாஸ் வீடும் தனது கையை விட்டு போய் விட்டது என்று கொதிக்கும் காயத்ரி சத்யாவை கடத்த திட்டம் போடுகிறாள், ஆனால் சத்யாவோ வீட்டை விட்டே வெளியில் வர முடியாத நிலையில் இருக்கிறாள். அவளை கடத்த புதிய திட்டம் ஒன்றை போடுகிறாள் காயத்ரி, அதில் அவள் ஜெயிப்பாளா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியும்.
வினோதினியை விரட்டிய அகிலா
காயத்ரிக்கு கொடுக்க வேண்டிய இரண்டு லட்சம் ரூபாய் செக்கை வினோதினிக்கு கொடுத்து விரட்டி விடுகிறார்கள். அவளும் சாபம் விட்டு விட்டு அழுது கொண்டே ஆட்டோ பிடித்து போக அவளை பின் தொடர்கிறான் பிரகாஷ். இருவரையும் கண்டு பிடித்தானா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.
வீடுதான் கதை
தெய்வமகள் 1215 எபிசோடுகள் முடிந்து விட்டது. ஒரு வீட்டை வைத்துதான் கதை நகர்கிறது. இப்போது புதிதாக இன்னும் என்னென்ன சிக்கல்களை கொண்டு வருவார்களோ இன்னும் எத்தனை எபிசோடுகள் இழுப்பார்களோ என்று புலம்புகின்றனர் டிவி ரசிகர்கள்.