EXCLUSIVE: பாஜக சரிய மத அரசியலே காரணம்.. வெறுப்பு அரசியல் எடுபடவில்லை.. தமிழக ஆம் ஆத்மி அதிரடி
தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் பேட்டி அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "பாஜக சறுக்கலுக்கு காரணம் மத அரசியல்தான்.. வெறுப்பு அரசியல் மக்களிடம் எடுபடவில்லை.. பாஜக இந்த தேர்தலை ஒரு பாடமாக எடுத்து கொண்டு, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. அப்படி செய்தால்தான் அவர்கள் நல்ல நிலைமைக்கு வர முடியும்.. இல்லையென்றால் இந்தியா பூராவும் இப்படி ஒரு சூழலைதான் தொடர்ந்து சந்திப்பார்கள்" என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மியே ஆட்சியை கைப்பற்றும் என்பது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மூலம் தெரியவந்தது... இன்னும் சொல்லப்போனால் ஆம் ஆத்மியின் வெற்றி என்பது 15 நாளைக்கு முன்பே அரசல் புரசலாக கணிக்கப்பட்டு விட்டன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும் ஆம் ஆத்மியே ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்றும், பாஜக 2.ம் இடம் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் சொற்ப இடங்கள் பிடிப்பதே கஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இவை அத்தனையும் இன்று பலித்துள்ளது!
மீண்டும் அரியணை ஏறியுள்ளது ஆம் ஆத்மி.. எந்த வியூகமும் போணியாகாமல் ஆட்சியை பிடிக்க நினைத்த பாஜக ஏமாற்றம் அடைந்துள்ளது.. கெஜ்ரிவாலுக்கு மகத்தான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் அவர்களை ஒன் இந்தியா தமிழ் சார்பாக சந்தித்து பேசினோம்.. டெல்லி வெற்றி குறித்தும், ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது குறித்தும் கேட்டோம்.. வசீகரனின் பதில் இதுதான்:
கேள்வி: தலைநகரை ஆம் ஆத்மி திரும்பவும் கைப்பற்றியுள்ளது.. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
பதில்: ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து இருக்கிறது.. இதுக்கு முக்கிய காரணம் மக்களுடன் எப்படி இருக்கணும், மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பதை ஆழமாக புரிந்து கொண்டோம்.. தேவையானதை பூர்த்தி செய்தால், மக்கள் தானாகவே நம்மை தேர்ந்தெடுப்பார்கள்..
தேர்தலை நோக்கி மக்களிடம் செல்லாமல், மக்களின் தேவைகளை நோக்கி சென்றால், மக்கள் கைவிட மாட்டார்கள் மிகப்பெரிய சான்று.. உதாரணம்... தான் இன்றைய ஆம் ஆத்மியின் வெற்றி!
கேள்வி: ஆளும் பாஜகவின் தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்? அமித்ஷாவின் வியூகம் இருந்தும் சோடை போக காரணம் என்ன?
பதில்: பாரதீய ஜனதா கட்சி அங்கே எதிரணியில் உள்ளது.. இந்த கட்சியின் சறுக்கலுக்கு காரணம் மத அரசியல்தான்.. அது செய்த வெறுப்பு அரசியலும் மக்களிடம் எடுபடவில்லை.. இனிமேல் வரும் காலங்களில் அது எந்த மாநில கட்சியாக இருந்தாலும் சரி, மக்களுக்கு சேவை செய்தால், அவர்கள் தம்மை அங்கீகரிப்பார்கள்.. இதைதான் நாங்கள் செய்தோம்.. பாஜகவும் இந்த தேர்தலை ஒரு பாடமாக எடுத்து கொண்டு, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. அப்படி செய்தால்தான் அவர்கள் நல்ல நிலைமைக்கு வர முடியும்.. இல்லையென்றால் இந்தியா பூராவும் இப்படி ஒரு சூழலைதான் தொடர்ந்து சந்திப்பார்கள்!!
கேள்வி: காங்கிரஸ் மண் என்று சொல்லப்பட்ட தலைநகரம், இன்று அதே மண்ணை கவ்வி உள்ளதே?
காங்கிரஸ் கட்சி டெல்லியை பொறுத்தவரை அது எங்கேயுமே இல்லை.. பிரச்சாரங்களும் அங்கு தென்படவில்லை.. அவர்கள் ஏன் அப்படி பிரச்சாரம் செய்தார்கள்? தோல்விக்கு என்ன காரணம் என்பதற்கு நீங்க அவங்ககிட்டதான் விளக்கம் கேட்கணும்... ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.. மக்களின் பணிகளை தொடர்ந்து செய்வோம்.. தேர்தல் வாக்குறுதியில் என்னவெல்லாம் சொன்னோமோ அதையெல்லாம் இனி நிறைவேற்றுவோம்" என்றார்.