ரூ. 10 கோடி ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தினகரனுக்கு தொடர்பா.. திடீர் திருப்பம்!
டெல்லியிலிருந்து சென்னை வந்துள்ள போலீஸ் குழு, தினகரனிடம் ரூ. 10 கோடி ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பாக விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக தினகரனிடம் லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட சுகேஷை டெல்லி போலீஸார் சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். அப்போது ரூ. 10 கோடி ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் தினகரனிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக தினகரனிடம் ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டு முன்பணமாக ரூ.1.3 கோடி பணத்தை பெற்றதாக சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை 8 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
சென்னையில் டெல்லி போலீஸார்
சுகேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவரிடம் சம்மனிடம் ஒப்படைத்த பின்னர் டெல்லி அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ரூ.10 கோடி ஹவாலா பணம்
இந்நிலையில் திடீர் திருப்பமாக, ரூ.10 கோடி ஹவாலா பணம் சென்னையிலிருந்து டெல்லிக்கு கைமாறியது குறித்து போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பணத்திற்கும் தினகரனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
10 கோடியும் தினகரனுடையதா
எனவே இந்த 10 கோடி பணத்திலிருந்துதான் இரட்டை இலை சின்னத்தை பெற இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்க பரிமாற்றம் செய்யப்பட்டதா என்பது குறித்து டெல்லி குற்றவியல் பிரிவு போலீஸார் விசாரிக்கவுள்ளனர். எனவேதான் நேரடியாக சென்னையில் வைத்தே தினகரனை விசாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தினகரனுக்கான கேள்விகள்
லஞ்ச வழக்கு தொடர்பாக தினகரனிடம் என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பது குறித்து தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் சுகேஷுக்கும் அவருக்குமான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும். சென்னையிலிருந்து டெல்லிக்கு கைமாறப்பட்ட பணம் ஹவாலா பணம் என்பதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் போலீஸ் குழு சேகரிக்கும்.
பிளானில் திடீர் மாற்றம்
முன்னதாக தினகரனை டெல்லி அழைத்து சென்று விசாரணை நடத்துவதாக இருந்தனர். ஆனால் தற்போது ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவடைந்தவுடன் சுகேஷை சென்னைக்கு அழைத்து வந்து தினகரன் முன்னிலையில் விசாரணையை முன்னெடுத்து செல்ல டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.