இரட்டை இலைக்கு லஞ்சம்.. டிச. 5க்குள் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு!
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கல் டிசம்பர் 5க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகிறது. டிசம்பர் 5க்குள் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆர் கே நகர் இடைத் தேர்தலின் போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் தரப்பு பேரம் பேசியதாக வழக்கு போடப்பட்டது. இதற்காக சுகேஷிடம் ரூ. 1.5 கோடி முன்பணம் தரப்பட்டதாகவும் சுகேஷை டெல்லி லாட்ஜில் கைது செய்த போலீசார் தெரிவித்தனர். சுகேஷ் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் தினகனும் சேர்க்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் விசாரணைக்கு சென்ற தினகரன் 4 நாட்கள் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு 42 நாட்களை டெல்லி திஹார் சிறையில் செலவிட்ட பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் டெல்லி போலீசார் தினகரன் பெயரை சேர்க்கவில்லை. எனவே இந்த வழக்கில் இருந்து தினகரன் விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் பரவின.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் இன்று நடந்தது. அப்போது டிசம்பர் 5-ந்தேதிக்குள் துணை குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் சுகேஷ் சந்திரசேகரின் காவலை வருகிற 23-ந்தேதி வரை நீட்டித்தும் கோர்ட்டு உத்தரவிட்டது.