என்ன ஆளைக் காணோமே.. டெல்லி மெட்ரோவில் ஏறினா டிரைவரைத் தேடாதீங்க சார்!
சென்னை: டெல்லி மெட்ரோவின் ஓட்டுநர் இல்லா புதிய ரயில்களின் சோதனை ஓட்டம் டெல்லியின் முகுந்த்பூரில் நடைபெற்று வருகின்றது.
6 பெட்டிகளுக்கு மேல் கொண்ட இந்த ஓட்டுநர் இல்லாத ரயில்கள் தென்கொரியாவிலிருந்து வந்தது. 2016 ஆம் ஆண்டு இறுதியில் டெல்லியில் இது ஓடத்தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 5 ரயில்கள் வந்தடைந்துள்ள நிலையில் மேலும் மூன்று இந்த வருடம் பிப்ரவரியில் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஓட்டுநர்கள்:
டெல்லி மெட்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இந்த ரயில்கள் முழுதும் கட்டுப்படுத்தப்படும். தொடக்கத்தில் ரயில் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவார்கள், ஆனால் போகப்போக ஓட்டுநர்கள் விலக்கிக் கொள்ளப்படுவார்கள்.
கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்:
பின்னர், ரயிலின் முழு இயக்கமும் மையக் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்படும். தற்போது அதற்கான சிக்னலிங், பிட்டிங் ஆகியவை பேஸ்-3 நிலையில் சோதிக்கப்பட்டு வருகின்றன.
மணிக்கு 85 கிலோ மீட்டர்:
இந்த ரயில்கள் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்கும். மேலும் சராசரி வேகம் 35 கிமீக்கும் சற்று கூடுதலாகச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2000 பேருக்கு மேல் பயணிக்கலாம்:
ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 380 பயணிகளுடன் மொத்தம் 2,280 பயணிகள் இதில் பிரயாணிக்கலாம். சிசிடிவி காமராக்கள் பொருத்தப்பட்டு இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.