தமிழ்நாடு போலீஸுக்கு கல்தா கொடுத்த டெல்லி போலீஸ்... திக் திக் 'ஏர்போர்ட்' நிமிடங்கள்...
டெல்லி போலீசிடம் இருந்து முன்கூட்டியே தகவல்களைப் பெற விமான நிலையத்தில் காத்திருந்த தமிழக போலீசாரை டெல்லி அதிகாரிகள் திட்டமிட்டே புறக்கணித்தனர்.
சென்னை : டிடிவி தினகரனுக்கு சம்மன் கொடுக்க டெல்லி போலீஸ் தங்கள் வருகை திட்டம் குறித்து எந்த தகவலும் தமிழக போலீசாருக்கு கசிந்திடாதவாறு செயல்பட்டனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு 60 கோடி ரூபாய் பேரம் பேசிய விவகாரத்தில் டிடிவி தினகரனுக்கு சம்மன் கொடுக்க டெல்லி போலீஸ் நேற்று சென்னை வந்தது. மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணியளவில் சென்னை வர திட்டமிட்டிருந்தது டெல்லி போலீஸ், ஆனால் விமானம் தாமதமாக வந்ததால் இரவு 9.30 மணிக்குத் தான் அதிகாரிகள் சென்னை வந்தனர்.
அலர்ட் டெல்லி போலீஸ்
டெல்லி அதிகாரிகளின் வருகைத் திட்டம் என்ன? அவர்கள் கொண்டு வந்துள்ள சம்மனில் என்ன சமாச்சாரம் உள்ளது என்று மோப்பம் பிடிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரிகள் முன்கூட்டியே விமான நிலையத்தில் முகாமிட்டனர். ஆனால் தமிழக உளவுத்துறை மற்றும் போலீசாரைக் கண்டதும் அலர்ட்டான டெல்லி போலீஸ் தாங்கள் வெளியே வந்த சற்று நேரத்தில் மீண்டும் விமான நிலையத்திற்குள்ளேயே சென்றனர்.
கண்ணாமூச்சி
இதனால் டெல்லியில் இருந்து வந்தவர்கள் எங்கே உள்ளார்கள் என்று தெரியாமல் உளவுத்துறையினர் ஒன்றரை மணி நேரம் ஏர்போர்ட்டை சுற்றி சுற்றி வந்து தலைசுற்றி போனார்கள். எங்கே போனது டெல்லி போலீஸ் என்று தமிழக போலீசும், மீடியாக்களும் அலைந்து திரிய சத்தம் காட்டாமல் சிறிய கார் ஒன்றில் புறப்பட்டுப் போயுள்ளனர் டெல்லி அதிகாரிகள்.
ஒன்னுமே தெரியலையே
மேலும் இன்று காலை 11 மணிக்குத் தான் தினகரனுக்கு சம்மன் கொடுப்பதாக டெல்லி தெரிவித்ததால் போலீசும், மீடியாவும் அசால்ட்டாக இருக்க பிளானை மாற்றி இரவு 11 மணிக்கே தினகரனிடம் சம்மனை அளித்தது டெல்லி போலீஸ். விஷயம் தெரிந்து அடித்து பிடித்து வந்தது போலீசும், உளவுத்துறையும் அதிலும் ஒரு டுவிஸ்ட்டாக சம்மனில் என்ன விஷயம் உள்ளது என்று இரவு 12.30 மணி வரையும் தெரியவில்லை என்பதால் என்ன தகவலை அரசுக்கு தெரிவிப்பது என்று தெரியாமல் உளவுத்துறை கை பிசைந்து நின்றது.
எல்லாவற்றிலும் கோட்டை
ஒரு வழியாக 12.45 மணிக்கு தகவல் வெளியானது சனிக்கிழமை டிடிவி தினகரன் டெல்லியில் ஆஜராகி தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் கூறியுள்ளது. இதில் மட்டும் கோட்டை விடவில்லை தமிழக போலீஸ், தினகரன் வீட்டின் முன் ஏற்கனவே ஒருவர் மண்எண்ணெய் பாட்டிலுடன் நின்றிருந்ததை கண்டும் காணாமல் விட்டதால் அவர் தீக்குளிக்க முயன்று ஒரு களேபரமாகிவிட்டது. அனைத்து விஷயங்களிலும் ஏன் கோட்டை விட்டீர்கள் என்று உளவுத்துறை மற்றும் தமிழக போலீசாருக்கு காவல்துறை இயக்குனர் செம டோஸ் விட்டாராம்.