மனைவி முன்னிலையில், டிடிவி தினகரனிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய டெல்லி போலீஸ்
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் வீட்டில் 6 மணிநேரமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் வீட்டில் 6 மணிநேரமாக நடைபெற்ற தொடர் விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து அடையாறு இல்லத்தில் இருந்து ராஜாஜி பவன் அழைத்துச் செல்லப்பட்டார் தினகரன்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது வழக்கு. இவ்வழக்கில் புரோக்கர் சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது டிடிவி தினகரனை 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது டெல்லி போலீஸ். இதையடுத்து தினகரனை இன்று சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
அங்கு மனைவி அனுராதா முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அனுராதாவிடமும் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனாவும் இருந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டில் மூவரிடமும் முதல் கட்ட விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணிநேர விசாரணைக்கு பின்னர் தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் ராஜாஜி பவனுக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.