பிடிகொடுக்க மறுக்கும் ரஜினி... அதிருப்தியில் டெல்லி.. மேலிட தூண்டுதலில் போட்டு தாக்கிய சு.சுவாமி!
பாஜகவில் இணைய மறுப்பதாலேயே பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ரஜினிகாந்தை மேலிட ஆசியுடன் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
சென்னை: பாஜகவில் இணைய தொடர்ந்து மறுத்து வருவதால்தான் ரஜினிகாந்தை சீண்டும் வகையில் டெல்லி மேலிடம் சுப்பிரமணியன் சுவாமியை தூண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தாம் அரசியலுக்கு வரப் போவதை மறைமுகமாக தெரிவித்தார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது.
ரஜினிகாந்தை களமிறக்குவதே பாஜகதான் எனக் கூறப்பட்டு வந்தது. சென்னை ஆடிட்டர் ஆலோசனையில்தான் ரஜினி களமிறங்குகிறார் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
பொதுநபர் அடையாளம்
ஆனால் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக பலரையும் சந்திக்கின்றபோது தனிக்கட்சி தொடங்குவது என்பதில்தான் உறுதியாக இருக்கிறார் என்பது தெரியவந்தது. தம்மை ஒரு பொதுவான நபராக அடையாளப்படுத்திக் கொள்ளவே ரஜினிகாந்த் விரும்புகிறார் என்பதும் தெரியவந்தது.
அதிருப்தியில் பாஜக
இதனால் பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் வெளிப்படையாக ரஜினிகாந்தை எதிர்க்காமல் இருந்தனர்.
சு.சுவாமி சாடல்
இந்நிலையில்தான் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, ரஜினிகாந்த் படிக்காதவர்; அரசியலுக்கு வரக்கூடாது என அதிரடி காட்டியிருந்தார். இது தமிழக பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
டெல்லிதான் காரணமாம்
ஆனால் ரஜினியின் போக்கில் அதிருப்தி அடைந்த டெல்லி மேலிடம்தான் அவரது இமேஜை டேமேஜ் செய்ய முடிவு செய்துவிட்டதாம். இதனால் சுப்பிரமணியன் சுவாமி மூலமாக இதுபோன்ற கருத்துகளை சொல்ல வைத்திருக்கிறதாம் டெல்லி.