டெல்லி ஆளுநர் அதிகார வழக்கில் தீர்ப்பு... தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுகள் வரம்புக்குள் வருமா?
டெல்லி ஆளுநர் அதிகார வழக்கில் தீர்ப்பு வந்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள ஆளுநரின் ஆய்வுகள் வரம்புக்குள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வுகளை வரம்புக்குள் கொண்டு வரப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
யூனியன் பிரதேசமும் நாட்டின் தலைநகருமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், துணை நிலை ஆளுநர்களே பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளுக்கும் துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது.
அதிகாரம் யாருக்கு
இதையடுத்து எனவே, டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி டெல்லி ஹைகோர்ட்டில் கடந்த 2016ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. இதில் துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிகாரம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒப்புதல் தேவையில்லை
இதை ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் என்றும் கொள்கை முடிவுகளை ஆளுநரிடம் கூறலாமே தவிர அவரது ஒப்புதல் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது. இது பெரும் அதிரடி தீர்ப்பாகும்.
மேற்கொள்கிறார்
டெல்லியை போன்று தமிழகம், புதுவை ஆகியன ஆளுநர்களின் தலையீட்டால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. புதுவையில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே இதே தகராறுதான். அதுபோல் தமிழகத்தில் ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித் தன்னிச்சையாக மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.
போலீஸ் கைது
இதை ஆளும் அதிமுக அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மாநில உரிமைகளை மீறுவதாக ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இதனால் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவினர் கருப்புக் கொடி காட்டுவதும் அவர்களை போலீஸார் கைது செய்வதுமாக இருக்கிறது.
சுற்றறிக்கை
இதனிடையே நாமக்கல்லில் திமுகவினர் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டினர். இதையடுத்து ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று ஆளுநர் சுற்றறிக்கை விட்டதை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. தற்போது டெல்லியில் வழங்கப்பட்ட தீர்ப்பால் தமிழகத்தில் ஏதாவது தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகிழ்ச்சி
தற்போதைய தீர்ப்பால் தமிழக ஆளுநர் ஆய்வுகள் நடத்துவது இந்த வரம்புக்குள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுநரின் ஆய்வுக்கு ஆளும் கட்சி எதிர்க்கவில்லை என்றாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி விவகாரத்தை முன்னுதாரணமாக கொண்டு நீதிமன்றத்தை நாடலாம். எனவே இனி ஆளுநரின் ஆய்வுகள் முறைப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.