ஜனாதிபதி தேர்தல்: எம்.எல்.ஏ.க்களை வளைத்து கண்ணாமூச்சு காட்டும் தினகரன்- கோபத்தில் டெல்லி!
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை மிரட்டுவதற்காக எம்.எல்.ஏ.க்களை தினகரன் வளைத்துப் போடுகிறாராம். இதனால் டெல்லி கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜகவை மிரட்டிப் பார்க்கவே எம்.எல்.ஏக்களை தினகரன் வளைத்துப் போட்டு வருவதாக சசிகலா கோஷ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. கனிமொழி மூலமாகவும் தி.மு.கவுக்கு மறைமுக தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. உத்தரபிரதேச தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பா.ஜ.கவின் வெற்றி சதவீதம் அதிகரித்துவிட்டது.
60% வாக்குகளுக்கு குறி
பாஜகவின் டார்கெட்டே 60% வாக்குகளைப் பெற வேண்டும் என்பதுதான். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் ஒன்றாக்கி, முழு வாக்குகளையும் பெற வேண்டும் என்பதும் பா.ஜ.கவின் திட்டம்.
இணைப்பு பேச்சுவார்த்தை
ஓபிஎஸ்ஸிடம் டெல்லி நேரடியாக இதை சொல்லிவிட்டது. இதனால் மீண்டும் இணைப்பு... இணைப்பு எனும் பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.
பாஜக அதிர்ச்சி
அதேநேரத்தில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை தினகரன் அதிரடியாக வளைத்து தம் வசம் வைத்திருப்பது பாஜகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த எம்.எல்.ஏக்களின் வாக்குகளை வைத்து தினகரன் தங்களுக்கு சவால் விடுகிறாரே என்கிற கடும் கோபத்தில் இருக்கிறதாம் டெல்லி.
பிரதீபா பாட்டீல் தேர்தல்..
கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.கவில் இருந்து ஆறு எம்.எல்.ஏக்கள். பைரோன்சிங்குக்கு வாக்களிக்காமல், காங்கிரஸ் கட்சியின் பிரதீபா பாட்டிலுக்கு வாக்களித்தனர். அதேபோல், மோடி நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தால் என்ன செய்வது?' என்பதால்தான் டெல்லி அமைதியாக வேடிக்கை பார்க்கிறதாம்.
விபரீதம் ஏற்பட்டால்...
தற்போது 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை வளைக்க இருக்கிறார் தினகரன். ஜனாதிபதி தலைவர் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான் தினகரன் ஆடுபுலி ஆட்டம் ஆடுவதை டெல்லி ரசிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் மட்டும் இந்த ஆட்டத்தால் பாதிப்பு வந்தால் அவ்ளோதான் என கருவிக் கொண்டிருக்கிறதாம் டெல்லி.