6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை- காவிரி டெல்டா விவசாயிகளை காக்க என்ன செய்யும் தமிழக அரசு?
கடந்த ஆறு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையாவது அரசு உடனடியாக தர வேண்டும் என விவசாயிகள்
தஞ்சை: கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படாததால் விவசாயம் நலிந்து நெல் உற்பத்தியும் குறைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படும். ஆனால், கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படவில்லை.
காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 16.05 ஏக்கர் நிலங்கள் முழுக்க முழுக்க காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை மற்றும் சம்பா சாகுபடியை செய்கின்றன. பொதுவாக தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று போகங்களில் நெல் விளைவிக்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் 90 அடி நீர்மட்டம் இருந்தால் மட்டுமே நீர் திறந்துவிடப்படும். மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடி என்பது குறிப்பிடத்தகக்து. கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் ஜூன் மாதத்தில் நீர்மட்டம் 45-50 அடிகளாகவே இருந்ததால் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறந்துவிடப்படவில்லை.
ஜெயலலிதா விவசாயிகளுக்கு சலுகைகள்!
ஆனால், கடந்த ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படாது என்று அறிவித்தார். ஆனால், நிலத்தடி நீரை பம்ப்செட் மூலம் எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பல சலுகைகளை அறிவித்தார். குறிப்பாக, விதை நெல்லுக்கும் உரத்துக்கும் மானியம் வழங்கினார். பம்ப்செட் மூலம் தண்ணீர் எடுக்கும் குழாய்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதனால் சிறு, குறு விவசாயிகள் பயனடைந்தனர்.
விவசாயிகள் தொடர் மரணம்
ஆனால், இந்த ஆண்டு குறுவை பயிர்கள் கருகி நாசமானதைக் கண்டு டெல்டா மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்தும் இறந்தனர். தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இப்படியான மரணங்கள் நிகழ்ந்தது இல்லை என்னும் அளவுக்கு விவசாயிகள் தினம் தினம் மடிந்தனர்.
சொந்தப் பிரச்சனையால் மரணம்
ஆனால், இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது அரசு விவசாயிகள் தங்கள் சொந்த பிரச்சனையின் காரணமாகத்தான் இறந்து போனார்கள் என தெரிவித்தது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தியது.
கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம்
தற்போது மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், சம்பா சாகுபடியையாவது நல்ல முறையில் செய்யலாம் என்று விவசாயிகள் நினைத்தாலும் கதிராமங்கலம், மற்றும் நெடுவாசல் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் 150 நாட்களைத் தாண்டியும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு தொடர் பிரச்சனைகள்
இந்த பிரச்சனைகளுக்கு நடுவே டெல்டா விவசாயிகள் நிரந்தர தீர்வு என கருதிய காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தாமல் முரண்டு பிடித்து வருகிறது. தமிழக விவசாயிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர் இல்லாதது, தஞ்சை டெல்டா பகுதியை பெட்ரோல் மண்டலமாக மாற்றும் மத்திய அரசின் திட்டம், பயிர்க்கடன் கிடைக்காதது என பல பிரச்சனைகள் விவசாயிகளை துன்புறுத்திக்கொண்டுள்ளன.