அதெப்படி தேர்தல் அதிகாரியை நான் மிரட்ட முடியும்? கேள்வி கேட்கிறார் விஷால்
தேர்தல் அதிகாரியை நான் மிரட்டியதாக கூறுகிறார்கள் அது முடியுமா? என்று நடிகர் விஷால் கேட்டுள்ளார். ஜனநாயகத்தில் நிலை இப்படியாகிவிட்டதே என்றும் அவர் கேட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: நான் மிரட்டியதால் என்று வேட்புமனுவை முதலில் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் அதிகாரி கூறுவதில் உண்மையில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். 5 ஆம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் விஷால் தொடர்ச்சியாக முட்டி மோதிப்பார்த்தார். ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் விஷாலின் கோரிக்கையை ஏற்க வேலுச்சாமி மறுத்து விட்டார்.
ஆடியோ ஆதாரம் கொடுத்த விஷால்
நடிகர் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் சுமதி மற்றும் தீபன் இருவரின் கையெழுத்து போலியானது என்று எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் மிரட்டப்பட்டதால் சுமதியும், தீபனும் பின்வாங்கியதாக ஆடியோ ஆதாரத்தை விஷால் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் புகார் மனு அளித்தார். ஆனால் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது என்று தேர்தல் அதிகாரி கூறி விட்டார்.
வேட்புமனுவை ஏற்றது ஏன்?
செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,என் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது வீடியோவில் உள்ளது . ஆனால் 2 மணி நேரம் கழித்து மனுவை நிராகரித்துள்ளனர். நான் மிரட்டியதால் முதலில் எனது மனுவை ஏற்றுக்கொண்டதாக தேர்தல் அதிகாரி கூறுகிறார். அது எப்படி ஒரு அரசு அதிகாரியை நான் மிரட்ட முடியும்?
இப்படியாகிவிட்டதே
இந்த விசயத்தினை இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் நான் கொண்டு செல்வேன்.
நான் தேர்தலில் போட்டியிடுவது, போட்டியிடாதது பிரச்சினையில்லை. ஆனால் ஜனநாயகத்தில் நிலை இப்படியாகிவிட்டதே என்பதுதான் வேதனை. ஜனநாயகம் மிக கீழான நிலைக்கு சென்று விட்டது என்றும் விஷால் கூறினார்.
விஷால் மனு நிராகரிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த 2ஆம் தேதி அறிவித்தார் விஷால். அது முதலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த போதே அவருக்கு ஏழரையாகத்தான் இருந்தது. எப்படியோ சில மணிநேரங்கள் காத்திருந்து மனுதாக்கல் செய்தார்.
மணிக்கு மணி பரபரப்பு
செவ்வாய்கிழமையன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது மணிக்கு மணி பரபரப்பு ஏற்பட்டது. விஷாலின் மனு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் நிராகரிக்கப்பட்டது. 8 மணியளவில் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரவு 11 மணியளவில் நிராகரிக்கப்பட்டது. இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் கடைசி நிமிடம் வரை முட்டி மோதி விட்டார் விஷால்.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
ஆனால் விஷாலின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்பதுதான் டிசைன் அதை அவரால் மாற்ற முடியுமா என்ன? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஷால். ஆர்.கே. நகரில் அனுபவம் கொள்முதல். அடுத்தமுறை மிரட்டினாலும் மனம் மாறாதவர்களை முன்மொழிய வைக்கலாம்.