அதிமுகவுக்கு வெற்றி.. ஜனநாயகத்துக்கு தோல்வி.. ஆர்கே நகர் பற்றி மகேந்திரன் கமெண்ட்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால், ஜனநாயகம் தோற்றுவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. அப்போது தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றுக்கு மகேந்திரன் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோற்றுவிட்டது. அதிமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், இந்த வெற்றிக்கு பின்னால் ஜனநாயகம் சீரழிந்து கிடக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை.
தேர்தல் பிரசாரத்தில் மாநில அமைச்சர்கள் அனைவரும் ஈடுபட்டு, இலவசங்களையும், சலுகைகளையும் மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். இது வேதனைக்குரியது.
இத்தேர்தலில் நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாக இருந்தது. இப்போது நாங்கள் பெற்றுள்ள வாக்குகள் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளன என்றார்.