தாமிரபரணி ஆற்றில் இறங்கி வாய்க்கரிசி போட்டு பாலூற்றி நூதனப் போராட்டம்
தாமிரபரணி ஆற்றில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதைக் கண்டித்து அந்த ஆற்றில் இறங்கிய ஜனநாயக மக்கள் கட்சியினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
நெல்லை: பெப்சி, கோக் ஆகிய வெளிநாட்டு குளிர்பானங்கள் தாமிரபரணி ஆற்றில் நீர் எடுப்பதற்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து ஜனநாயக மக்கள் கட்சியினர் ஆற்றில் இறங்கி நூதனமான முறையில் இன்று போராட்டம் நடத்தினர்.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பொய்த்ததால், கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீருக்காக அண்டைய மாநிலங்களை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோக், பெப்சி நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயக மக்கள் கட்சியினர் தாமிரபரணி ஆற்றுக்குள் இன்று இறங்கினர்.
ஆற்றில் இறங்கி பாலூற்றியும், வாய்க்கரிசிப் போட்டும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். மேலும் சமூகவலைதளங்கள் மூலம் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் திரண்ட இளைஞர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.