ரயில்வே பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 65 வீடுகள் இடிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை
ரயில்வே நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் கோர்ட்டு உத்தரவின்படி நேற்று இடிக்கப்பட்டன.
செங்கோட்டை: கேரள மாநிலம் கழுதுருட்டி பகுதியில் ரயில்வே பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 65 வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை இடிக்கப்பட்டன.
தமிழக, கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய இரயில் பாதையாக 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் கொல்லம் வரை மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைத்தனர்.
இந்த தடத்தில் செங்கோட்டை-புனலூர் இடையே 2010 ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த பணிகள் வேகமெடுத்து தற்போது 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் உள்ளது. வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில் போக்குவரத்தை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் கழுதுருட்டியில் சுமார் 65 வீடுகள் ரயில்வே பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதை இடித்தால் தான் மீண்டும் பணிகளை தொடங்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தனர். நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை இரயில்வே அதிகாரிகள், 50க்கும் மேற்பட்ட கேரள போலீசார் பாதுகாப்போடு கழுதுருட்டியில் ரயில்வே நிலத்தில் கட்டப்பட்ட 65 வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பான சூழல் நிலவியது.