சென்னை, மவுலிவாக்கம் 2வது கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது - சிஎம்டிஏ
சென்னை,மவுலிவாக்கத்தில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடம் நவம்பர் 2ம் தேதி இடிக்கப்படுவதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள அபாயகரமான 2வது கட்டிடம் நாளை இடிக்கப்படும் என சிஎம்டிஏ தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த 2014 ஜூன் 28ம் தேதி பெய்த மழையின்போது திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வெளி மாநில பணியாளர்கள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே அதன் அருகே உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆபத்தான நிலையில் உள்ள இரண்டாவது கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது.
நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடம் இடிக்கப்பட உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் கட்டிடம் இடிக்கப்படும். கட்டிடம் இடிக்கப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் எந்த வித பீதியோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை என சி.எம்.டி.ஏ. தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படியும் சிஎம்டிஏ கேட்டுக்கொண்டுள்ளது. பருமழை தொடங்கும் முன்பே கட்டிடத்தை இடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.