மலையாக குவிந்த பழைய ரூபாய் நோட்டுகள்- ஒரே நாளில் ரூ.7 கோடி வரி வசூலித்த சென்னை மாநகராட்சி!
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதன் விளைவினால் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.7 கோடியே 21 லட்சம் வசூலாகி சாதனை படைத்துள்ளது.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளதன் விளைவினால் வங்கிகளில் மட்டுமின்றி அரசு நிறுவனங்களிலும் அந்த ரூபாய் நோட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளன.
செல்லாத அந்த ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதால் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.7 கோடியே 21 லட்சம் வசூலாகி சாதனை படைத்துள்ளது.
கடந்த வாரம் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இருந்து சென்னை மாநகராட்சி வரி வசூல் செய்ய சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் வரி வசூல் மையங்கள் செயல்பட்டன.
இதற்காக மொத்தம் 446 சிறப்பு வரி வசூல் முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில் தொழில் வரி உள்ளிட் வரி வசூலில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு சென்னை வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், ஞாயிற்றுக்கிழை விடுமுறை என்ற போதிலும் சிறப்பு முகாம்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அதில் ஒரு நாளில் மட்டும் ரூ.7 கோடியே 21 லட்சம் வரி வசூலாகி இருப்பதாக மாநகராட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்களுக்கு உதவும் வகையில் திங்கள்கிழமையும் வழக்கமான பணி நேரத்தைவிட கூடுதல் நேரம் வரி வசூல் மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் 700 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை செயல்படுத்த வரி ஏய்ப்பில் ஈடுபடும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.