தேனியில் பெண் தொழிலாளி வங்கிக் கணக்கில் ஒன்றரை கோடி ரூபாய் டெபாசிட் - வருமான வரித்துறை விசாரணை
நூறு நாள் வேலை செய்யும் பெண் கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் தவறுதலாக போடப்பட்ட ரூ.1.5 கோடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி: தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் மத்திய அரசின் 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்கான சம்பளத்தை பெறுவதற்காக, வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளார். மாதந்தோறும் வங்கிக்கு சென்று, சேமிப்பு புத்தகம் மூலம் பணம் பெற்று வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சேமிப்பு கணக்கு புத்தகத்தில் இருப்பு விவரங்கள் குறித்து பதிவு செய்ய சென்றார். அப்போது அவருடைய கணக்கில் ஒருமுறை ரூ.50 லட்சமும், மற்றொரு முறை ரூ.1 கோடியும் போடப்பட்டுள்ளது. பின்னர் அந்த பணம் வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. இதனையறிந்த முனியம்மாள், வங்கி அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், தவறுதலாக பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இந்த விவரங்களை வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தில் குறுக்கு கோடிட்டுள்ளனர். இந்த செய்தி நாகலாபுரம் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து, வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.