20 நாட்கள் கடந்தும் தீராத பணப்பஞ்சம்... நிலைமை சீரடையாததால் குமுறும் மக்கள் - போராட்டம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மோடி அறிவித்து 20 நாட்களுக்கு மேலாகியும் பணப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை என்பதால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: பிரதமர் மோடி மோடி கடந்த 8ஆம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவிப்பு செய்தார். கருப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்று சொல்லப்பட்டாலும் கடந்த 20 நாட்களாக ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர்.
பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், வங்கிகளில் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. புதிய ரூபாய் 500 நோட்டு விநியோகிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னாலும், ஒரு சில ஏடிஎம்களில் மட்டுமே கிடைக்கிறது.
போதிய அளவுக்கு புதிய ரூபாய் 500 நோட்டுகளை விநியோகிக்காததாலும் சில்லறை நோட்டுகளின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாலும் மாற்றிய பணத்துக்கு புதிய ரூபாய் 2000 நோட்டு வழங்கப்பட்ட நிலையில் சில்லறை தட்டுப்பாட்டால் திண்டாடி வருகிறார்கள். பண விநியோகம் இன்னும் சீரடையாததால் பொறுமை இழந்து வரும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கிகளில் பணமில்லை
சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை, வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் காலையிலேயே வாடிக்கையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், எந்த வங்கியிலும் காலையில் பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை. பிற்பகலுக்கு மேல்தான் சில வங்கிகளில் பணத்தை கொடுத்தனர்.
சாலை மறியல்
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமுன்பு மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். 8 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்களுக்கு, கணக்கில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும். பணம் எடுக்க முடியாது என்று கூறியதால் மக்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து அவர்கள் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
20 நாட்களாக பிரச்சினை
வங்கியில் பணம் இல்லை என்று தெரிந்தும் இரண்டு நாட்களாக என்ன செய்தீர்கள்? எங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்கு இவ்வளவு கஷ்டப்படணுமா? வேதனைப்படணுமா? என்பது பொதுமக்களின் குமுறலாகும். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் பணப்பிரச்னைக்கு இன்னும் தீர்வு கிடைத்பாடில்லை
போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியினர் வங்கி முன்பு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோனேரிபட்டியில் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வங்கிகளில் நிலவும் பணத்தட்டுப்பாட்டு கண்டித்து சேலத்தில் வங்கியை முற்றுகையிட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
நிலைமை எப்போது சீரடையும்
பணம் செல்லாது என்று மோடி அறிவித்து 20 நாட்களுக்கு மேலாக ஆகிவிட்டது. இந்த அறிவிப்பால் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அன்றைய தினத்திலிருந்து மக்கள் தினமும் பலவித இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.பல திருமணங்கள் தடைபட்டுள்ளன. வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இனியாவது நிலைமை சீரடையுமா பார்க்கலாம்.