மோடி சொன்ன 50 நாள் நெருங்கிவிட்டது... பணத்தட்டுப்பாடு தீர்ந்ததா?
50 நாளில் நல்ல காலம் பொறந்திடும் என்று மோடி சொன்ன கெடு முடிய இன்னும் 3 நாட்களே உள்ளன. ஆனால் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.
சென்னை: கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து மோடி சொன்ன 50 நாட்கள் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பணத்தட்டுப்பாடோ, மக்கள் படும் அவதியோ தீர்ந்தபாடில்லை.
நவம்பர் 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 8ம் தேதி இரவு திடீரென அறிவித்தார். இதனால் கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தும் பலரால் பச்சைத் தண்ணீர் கூட வாங்க முடியாத அளவிற்கு ஒரு நொடியில் பிச்சைக்காரர்கள் போல் ஆனார்கள். குழந்தைகளுக்கு பால் கூட வாங்க முடியாமல் தாய்மார்கள் தவித்துப் போனார்கள்.
இந்நிலையில், எனக்கு 50 நாட்கள் கொடுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி அறிவித்தார். மேலும், கருப்புப் பணத்தை ஒழிக்க, கள்ள நோட்டுக்களை ஒழிக்க, பணமில்லா பரிவர்த்தனையை கொண்டு வர என்று ஏதேதோ நாளொரு பேச்சாக பேசி வந்தார் பிரதமர் மோடி. 50 நாளில் ஒரு பிரச்சனை முடிவிற்கு வந்துவிடும் என்றால் அதற்கான அறிகுறியே இன்னும் கண்ணில் தென்படவில்லை. 50 நாட்கள் முடிய இன்னும் 3 நாட்கள்தான் இருக்கின்றன.
திறக்கப்படாத ஏடிஎம்கள்
பண மதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியான இரண்டு நாட்கள் கழித்து ஏடிஎம்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், இன்றும் முழுமையாக எந்த ஏடிஎம் மையங்களும் திறக்கப்பட வில்லை. குறிப்பாக, அரசு வங்கிகள் எதுவும் முறையாக செயல்பட வில்லை. அப்படியே திறந்தாலும் சில நிமிடங்களில் பணம் தீர்ந்து மூடப்படுகின்றன. இதிலும், ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து அனுப்பி வருவதால், தனியார் ஏடிஎம் மையங்கள் அடிக்கடி திறக்கப்பட்டு வருகின்றன. என்றாலும், அதுவும் சற்று நேரத்தில் பணம் தீர்ந்து மூடப்பட்டுவிடுகின்றன.
இதர சேவைகள் நிறுத்தம்
வங்கிகளில் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கே மக்கள் டோக்கன் வாங்க வேண்டிய நிலையே 47 நாட்கள் ஆகியும் நீடித்து வருகிறது. பணத்தை எடுப்பது சிரமமாக இருப்பது போன்றே வங்கிகளில் மேற்கொள்ளப்படும் இதர சேவைகளான, டிடி எடுப்பது, காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திண்டாட்டம்
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் என்றால் மக்கள் படும் அவதியை சொல்லி மாளாது. தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால், எங்காவது திறந்திருக்கும் ஒன்றிரண்டு ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் தினமான நேற்று அன்றாட செலவுகள் செய்யக் கூட மக்களிடம் பணம் இல்லாமல் அல்லாடி வந்தனர். மேலும், எந்த ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்று இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சுற்றித் திரிந்தனர்.
பணத்திற்கு கட்டுப்பாடு
பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர், ஒருவர் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. என்றாலும் வங்கிகளில் பணத்தட்டுப்பாடு இருப்பதால் ஒருவருக்கு 24 ஆயிரம் ரூபாய் கொடுக்க வங்கிகள் மறுக்கின்றன. 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே வங்கிகள் கொடுக்கின்றன. இதனால், கையில் காசில்லாமல் மக்களுக்கும் வாடிக்கையாளர்களின் பணத்தை கொடுக்க முடியாத வங்கி அதிகாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
செல்லாத 2000 நோட்டு
வங்கிகள், ஏடிஎம் மையங்கள் என அனைத்திலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. அதனைப் பெற்றுக் கொண்டு சில்லறை கொடுப்பதற்கு கடைகாரர்களிடம் சில்லறை நோட்டுக்கள் இல்லை. இதற்கு புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் வந்தால் சரியாகிவிடும் என்று சொல்லப்பட்டது. என்றாலும், 500 ரூபாய் நோட்டுக்கள் முழு அளவில் மக்களிடையே இன்றும் சென்று சேரவில்லை. இன்றும் 3 நாட்களுக்குள் இதற்கு தீர்வு எட்டப்படுமா என்றும் தெரியவில்லை.
50 நாட்களில் பிரச்சனை தீர்ந்ததா?
பிரதமர் மோடி செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிடும்போது, பொதுமக்கள் 50 நாட்களுக்கு கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இன்றும் 3 நாட்களில் 50 நாட்கள் முடியப்போகிறது. இன்னமும் திறந்திருக்கும் ஏடிஎம்களில் கூட்டம் கூடிக் கொண்டுதான் இருக்கிறது. வியாபார மையங்கள் விற்பனை இன்றி ஈ ஓட்டிக் கொண்டிருக்கின்றனர் வியாபாரிகள்.
சாத்தியமாகாத டிஜிட்டல் இந்தியா
இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற வேண்டும் என்று மோடியிடம் ஆசை இருக்கலாம். அதற்கு முதல் அடிப்படை தேவை கல்வி. கல்வியே இன்னும் பல மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று சேராத போது டிஜிட்டல் மட்டும் எப்படி சாத்தியமாகும் என்பது சாதாரண எளிய மக்களின் கேள்வியாக உள்ளது. மோடி முதலில் கல்வியை கொடுக்கட்டும். டிஜிட்டல் இந்தியா தானாக உருவாகும் என்கிறார்கள் மக்கள்.