துண்டுத் துண்டாக வெட்டி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ரூ.1000 நோட்டுக்கள்… உறையூரில் பரபரப்பு
செல்லாத பழைய 1000 ரூபாய் நோட்டுக்கள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளன.
திருச்சி: சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்லாத பழைய 1000 ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு திருச்சி உறையூரில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் மர்ம நபர்கள் வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பில் கடுப்பான சிலர், பழைய 1000 ரூபாய் நோட்டுக்களை மூட்டை மூட்டையாக கட்டி குப்பைத் தொட்டிகளில் வீசிச் செல்கின்றனர். இதுபோல் செய்யக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்தும் சில இடங்களில் இப்போதும் நடைபெற்று வருகிறது.
திருச்சி உறையூரில் சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய செல்லாத 1000 ரூபாய் நோட்டுக்கள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளன. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிழித்து வீசப்பட்ட பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை பார்க்க கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், ரூபாய் நோட்டுக்களை துண்டுத் துண்டாக வெட்டி வீசிச் சென்றுள்ள மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த மறுநாள், உத்தர பிரதேசத்தில் 1000 ரூபாய் நோட்டுகள் குவியல் குவியலாக எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.