கட்டுக்கட்டாகப் பழைய ரூபாய் நோட்டுகள்... பதுக்கி வைத்திருந்தவர் கைது!
காரைக்குடியில் ராமசாமி என்பவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அவரிடமிருந்து 51 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி: கட்டுக்கட்டாக பழைய ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து அந்த பணத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தன் வீட்டில் மதுரையில் இருந்து கொண்டு வந்த பழைய ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து, போலீசார் அவர் வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்ட போது, பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் பழைய நோட்டுகளாக 51 லட்சம் ரூபாய் கிடைத்தது.
உடனே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
மேலும், பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்களை கைது செய்வோம் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தகக்து.