கடையநல்லூரில் மதுக்கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ., அபுபக்கர் பங்கேற்பு
மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர்: கடையநல்லூரில் மதுக்கடையை அகற்ற கோரி அனைத்து சமுதாயம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ., அபுபக்கர் பங்கேற்றார்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ள மதுக்கடைகளையும், குடியிருப்பு மற்றும் வழிபட்டு தலங்கள் அருகே அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக மாற்றி தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள கடையநல்லூர் ஊரின் மையப்பகுதியில் குடியிருப்பு மற்றும் வழிபட்டு தலங்கள் அருகே அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகளை அகற்ற கோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேல கடையநல்லூர் பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பட்டத்தில் எம்.எல்.ஏ., அபுபக்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.