மாப்பிள்ளைக்கு டெங்கு.. ராமச்சந்திராவில் அனுமதி.. கல்யாணம் ஒத்திவைப்பு... விழுப்புரத்தில் பரபரப்பு!
மணமகனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் இன்று விழுப்புரத்தில் நடைபெறவிருந்த ஒரு திருமணம் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை: விழுப்புரத்தில் இன்று திருமணம் நடைபெறவிருந்த மணமகனுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததால் அவர் சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது திருமணமும் வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை வேறு தீவிரமடைந்துள்ளதால் டெங்கு, மர்மக் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் விவேக்கிற்கும் சென்னையை சேர்ந்த மேனகாவுக்கும் இன்று திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரத்தில் இன்று நடைபெறவிருந்த திருமணத்துக்காக இரு வீட்டாரும் ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் மணமகன் விவேக்கிற்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதனால் இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் திருமணத்தை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இதையடுத்து விவேக் சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.