மிரட்டும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் 1000 பேருக்கு பாதிப்பு - கொசு ஒழிப்பில் தீவிரம்
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் ஆயிரம் பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு புள்ளி விவரப்படி, டெங்கு பாதிப்பால், ஏற்கனவே எட்டு பேர் பலியான நிலையில், தற்போது, மேலும் இருவர், மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. ஒரு வாரத்திற்கும் மேல் நீடிக்கும் இந்தக் காய்ச்சலால் பாதிப்பில்லை என, மருத்துவர்கள் தெரிவித்தாலும், மருத்துவமனைகளை நோக்கி, மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனையில், கடந்த, 1ம் தேதி முதல், நேற்று வரை, 2,600 பேர், மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த, அக்டோபர் 15ம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி, 106 பேருக்கு, டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மூடிமறைக்க சுகாதாரத்துறை முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அக்டோபர் 28ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கு காய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட தனி வார்டில் பெயரளவுக்கே கொசு வலை போடப்பட்டு இருந்தது. திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு 2,600 பேர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற விவரம் தெரியவந்தது. அமைச்சரும், செயலாளரும்
டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மண்டலங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. இதில் மக்கள் அதிக நெருக்கடி மிகுந்த மண்டலங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக தேனாம்பேட்டை மண்டலத்திலும், அடையாறு மண்டலத்திலும் உள்ள தனியார் அரசு மருத்துவமனைகளில் ஏராளமானவர்கள் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சிலருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் உள்ளது. ஆனால் அதை சுகாதாரத்துறையினர் மறுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளிலும் உள்ள, தனியார் மருத்துவமனைகள் அளிக்கும் டெங்கு தொடர்பான தகவல்களை மறைத்ததாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அது தொடர்பாக, நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், மேயர் சைதை துரைசாமி, எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டில் இதுவரை, 93 பேர் மட்டும் சென்னையில் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம், மலைவேம்பு, பப்பாளி இலைச் சாறு ஆகியவற்றை வழங்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது மாநகராட்சியும், சுகாதாரத்துறையும். அதே நேரத்தில் கொசு ஒழிப்பிலும் அக்கறை செலுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில், மாநிலம் முழுதும் இதுவரை, எட்டு பேர், டெங்குவால் இறந்ததாக, அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், தலைநகர் சென்னை உட்பட, பரவலாக மர்ம காய்ச்சலாலும், டெங்கு பாதிப்பாலும், பலர் பாதிக்கப்பட்டு வருவது, நோயின் தீவிரத்தை காட்டுவதாக உள்ளது.அரசு, போர்க்கால நடவடிக்கை எடுத்து, மக்கள் பாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.