மதுரை திருமங்கலத்தில் டெங்கு காய்ச்சல் இலவச விழிப்புணர்வு முகாம்.. பொதுமக்களிடையே ஆர்வம்!
மதுரை: டெங்கு காய்ச்சல் பற்றியும், அது வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றியும் திருமங்கலம் பாட்டீல் ரயில் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து டெங்கு தடுப்பு இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தின. இந்த முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், மக்கள் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன், சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை, சுகாதார நிறுவனத்தினருடன் தற்போது தனியார் நிறுவனங்களும் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர்.
டெங்கு விழிப்புணர்வு முகாம்
பாட்டீல் ரயில் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாமிற்கு நிறுவனத்தின் டிஜிஎம் டி.பிரின்ஸ் அருமை ராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசினார் முதன்மை அதிகாரி எம்.ஸ்டாலின் வரவேற்றார்.
பொதுமக்கள் பங்கேற்பு
சிறப்பு விருந்தினராக திருமங்கலம் நகராட்சியின் 8 வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் பங்கேற்றார். அவருக்கு நிறுவனத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டது. இந்த முகாமில் அந்த பகுதியைச் சேர்ந்த 6000 பொதுமக்களும், நிறுவன ஊழியர்களும் பங்கேற்று டெங்கு காய்ச்சல் பற்றியும், அதை தடுப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் அறிந்து கொண்டனர்.
ஹோமியோபதி மருத்துவர்கள்
திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் டாக்டர் செல்வராஜ், டாக்டர் அறிவுமதி ஆகியோர் தலைமையில், மருத்துவர்கள் கிளாட்சன், ராஜவேலு, அறிவாளன், ஜெயசாந்தி, சூர்யா ஹென்சீபா, சரண்யா, வைதேகி ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் பரவும் விதம், அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கிப் பேசினர்.