தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: சுகாதாரத்துறை செயலளர் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது எனவே டெங்கு காய்ச்சல் என்று யாரும் பீதி அடைய வேண்டாம் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு போதிய மருந்துகள் உள்ளன என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி பெய்து வருகிறது. மழைக்காலம் காரணமாக சில வகை காய்ச்சல் மக்களை தொற்றிக் கொள்ளலாம். எனவே தமிழக அரசு அனைத்து வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த காய்ச்சல் என்றாலும் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாடுங்கள். மருத்துவமனைக்கு சென்றதும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதற்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் எல்லாவித காய்ச்சலுக்கும் மருந்துகள் உள்ளன. டெங்கு காய்ச்சல் என்றாலும் அனைத்து மருத்துவமனைகளிலும் அந்த நோயை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன.
நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள அணுக்கள் குறைந்தால் அதை நிவர்த்தி செய்ய முடியும். போதுமான மருத்துவ வசதிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ளன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. டெங்கு காய்ச்சலை முதலிலேயே கண்டறிந்தால் அதை முற்றிலும் குணப்படுத்தலாம்.
நான் சொல்வது நோய் வரும் முன்பே விழிப்புணர்வாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசு நல்ல தண்ணீரில் வளரக்கூடியது. எனவே வீடுகளிலும், கட்டிடம் கட்டும் இடங்களிலும் அல்லது எந்த இடமாக இருந்தாலும் மழை நீர் தேங்கி கிடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.