நெல்லையில் பரவுகிறது டெங்கு காய்ச்சல்… பொதுமக்கள் பீதி
நெல்லையில் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் சிதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது. இதனால் டெங்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதில் பலருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த களக்காட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ரமணி என்பவருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் அப்பகுதியை சேர்ந்த மேலும் பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. இவர்கள் அனைவரும் நெல்லை, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை டாக்டர் கூறுகையில், முதலில் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. அது ஒரு வாரத்திற்கு பின்னர் டெங்குவாக மாறி விடுகிறது. டெங்கு பாதித்தவர்களுக்கு நீர் சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்கள்தான் என்று தெரிவித்தார்.
வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத் துறை சார்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரின் மூலம் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதாகவும் அதனை உடனே அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரி வருகின்றனர்.