என்ன பாடு படுத்துனீங்க.. அதிகாரிகளே இப்போ நீங்க அபராதம் கட்ட ரெடியா?
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவில்லை என மக்களிடம் அபராதம் வசூலித்தீர்களே, ஆனால் இங்கு சுற்றுப்புறமே தூய்மையாக இல்லையே. பொதுமக்களிடமே அபராதம் வசூலித்த அதிகாரிகள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கலாம்
சென்னை: ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் தத்தளிக்கும் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களும், இந்த கன மழை காரணமாக கலங்கிப்போயுள்ளன.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு அரசு அறிவித்த புள்ளி விவரப்படி டெங்கு காய்சலுக்கு 52 பேர் பலியாகியுள்ளனர்.
கவனிக்க வேண்டும். இது அரசு கொடுத்த புள்ளி விவரம். ஆனால் டெங்குவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக மருத்துவமனை கள நிலவரங்கள் கூறுகின்றன.
ரகசியமாம்
டெங்குவால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதை மீடியாக்களுக்கு தெரிவிக்க கூடாது என்பது ரகசிய உத்தரவு என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரங்களில். இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்துமாம். எனவே, மர்ம காய்ச்சல் என்று சொல்லி கேஸை முடிக்கிறார்கள். டெங்கு காய்ச்சலுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மக்களுக்கு அபராதம்
டெங்கு பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்வதாக கூறி வீடு வீடாக போய் கலெக்டர்களும், உயர் அதிகாரிகளும் ஆய்வுகள் நடத்தி அபராதம் விதித்து வருகிறார்கள். ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என்றெல்லாம் அபராதம் விதிக்கப்பட்ட செய்திகளை மக்கள் அறிந்திருப்பார்கள். கரூர் மாவட்டத்தில், கலெக்டர் ஆய்வுக்கு மக்களே எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியது.
சென்னையில் வெள்ளம்
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் விதத்தில், வீட்டுக்கு அருகே குப்பை கூளங்கள், தண்ணீரை சேகரமாக விட்டதுதான் இந்த அபராதத்திற்கு காரணம். ஆனால் இன்று நிலைமை என்ன? சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இப்படி நீர் தேங்க யார் காரணம்? ஏரிகளை ஆக்கிரமிக்க லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்த அதிகாரிகளும், ஏரிகளை வளைத்துப்போட்ட அரசியல் வியாதிகளும்தானே.
அபராதம் கொடுப்பார்களா அரசு அதிகாரிகள்
அரசு கூறிய லாஜிக் படி பார்த்தால், தண்ணீர் மற்றும் கழிவுகள் தேங்கியுள்ளதால் சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிக்குமே. அப்படியானால் இதற்கு அபராதம் முதலான தண்டனைகளுக்கு உள்ளாகப்போவோர் யார்? சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவில்லை என மக்களிடம் அபராதம் வசூலித்தீர்களே, ஆனால் இங்கு சுற்றுப்புறமே தூய்மையாக இல்லையே. பொதுமக்களிடமே அபராதம் வசூலித்த அதிகாரிகள் இப்போது தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்தாக வேண்டிய நிலை வந்துள்ளதே. தங்கள் கையாலாகாதத்தனத்தால் ஏற்பட்ட வெள்ள நீர் தேக்கம், கொசு உற்பத்திக்காக தங்களது ஒரு மாத சம்பளத்தையாவது அவர்கள் அரசுக்கு செலுத்த தயாரா?
கொசுவிலிருந்து தப்பியுங்கள்
வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில், மக்கள் கொசுக்கடியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியதை தவிர வேறு வழியில்லை. டெங்கு பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பவை என்பதால் பகலிலும் கொசு விரட்டிகளை பயன்படுத்த தயங்க வேண்டாம். டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு, வெள்ளத்தை அகற்றுவதில் மட்டும் துரிதம் காட்டிவிடுமா என்ன?