டெங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவது அரசு கட்டிடங்களில்தான் - அதிரவைக்கும் ஆய்வு
டெங்கு கொசுக்கள் பரவுவதில் ரயில்வே துறை, அரசுக் கட்டிடங்கள் ஆகியவையே அதிகப் பங்கு வகிக்கின்றன என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கொத்து கொத்தாக மக்கள் மடிந்து வரும் நிலையில், வீடுகளை விட அரசு அலுவலகங்களில் தான் 60% டெங்கு கொசுக்கள் அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் தமிழக கிளை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், அரசு கட்டிடங்களில் வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பை, ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் இருந்து டெங்கு கொசுக்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியப் பொதுச் சுகாதார நிறுவனத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
டெங்குவை பரப்பும் கொசுக்கள்
டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் எங்கே அதிகம் உற்பத்தியாகின்றன என்பதே அந்த ஆய்வு. இந்த ஆய்வில் பூச்சியியல் வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், நோய் வல்லுநர்கள், களப் பணியாளர்கள் எனப் பத்துப் பேர் இடம் பெற்றனர். கிட்டத்தட்ட ஒரு வார காலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1025 வீடுகள், 625 அரசு கட்டிடங்களில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனை, பள்ளிகள், நகராட்சி அலுவலகம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது.
கொசு உற்பத்தி எங்கே?
பல அரசு இடங்களில் நடத்திய ஆய்வில் ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் தான் 60 சதவீதக் கொசுக்கள் உற்பத்தியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு கட்டிட வளாகங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகளில் இருந்து டெங்கு கொசுக்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நன்னீரில் வளரும் கொசுக்கள்
ஆய்வின் முடிவில், வீடுகளைவிட அரசு கட்டிடங்களிலும், தேசிய மாநில நெடுஞ்சாலைகளிலும், கொசு உற்பத்தி உருவாகக்கூடிய தண்ணீர் தேங்கும் பொருட்கள் 27.7 சதவீதம் இருப்பது தெரியவந்துள்ளது. வீடுகளில் தற்போது இது கட்டுப்படுத்தப்பட்டு 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பாறை குழிகளில் கொசு உற்பத்தி
செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பொதுச் சுகாதார நிறுவனத்தின் தமிழகக் கிளையின் தலைவர் டாக்டர் இளங்கோ, கிரானைட் குவாரிகள், பாறைக் குழிகள் போன்ற மக்கள் போக முடியாத இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. அரசு கட்டிடங்களில் 40 சதவீதம் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகின்றன.
தடுப்பு நடவடிக்கை தேவை
வீடுகளில் கொசு உற்பத்தி குறைந்துவிட்டது. பொது இடங்களில் கொசு உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளது. ரயில் நிலையங்கள், யார்டு பகுதியில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாவது ஆய்வில் தெரியவருகிறது. இந்த இடங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்துத் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலையங்களில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேவையற்ற பொருட்கள்
அரசுக் கட்டிடங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். பயனற்றுக் கிடக்கும் வாகனங்கள், தேவையற்ற பொருட்களை அகற்றினால் 15 நாட்களுக்குள் டெங்கு உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். ரயில்வே துறை இவற்றைச் செய்யாமல் டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
ஓட்டை உடைசல் அதிகம்
பொதுவாகவே அரசு அலுவலகங்களில் குப்பைகள், ஓட்டை உடைசல்கள் அதிகமாகவே குவிந்திருக்கும். இதேபோல ரயில் நிலையங்களில் அதிகம் குப்பைகள் காணப்படும். இந்த குப்பைகள்தான் கொசு உற்பத்தி கூடாரமாகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. முதலில் இவற்றை ஒழித்தாலே போதும் டெங்கு குறைந்து விடும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.