டெங்கு காய்ச்சல்... இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் விழிப்பிதுங்கி நிற்கும் சுகாதார பணியாளர்கள்
டெங்கு காய்ச்சலால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சுகாதார பணியாளர்கள் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.
நெல்லை: நெல்லை மாவட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் சுகாதார பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நெல்லையிலும், நெல்லை மாவட்ட பகுதியிலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வடகிழக்கு மாவட்டங்களில் பெய்த தென் மேற்கு பருவ மழையினால் தேங்கிய தண்ணீரில் ஏடீஸ் கொசுக்கள் அதிக அளவில் பரவியுள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 8 மாதத்தில் நெல்லை அரசு தலைமை மருத்துவமனையில் 1000 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.
இது போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் தென்காசி, கடையநல்லூர் அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்காக சுமார் 300 பேர் வரை சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த மாநகராட்சி சுகாதார அதிகாரி பொற்செல்வன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கொசு ஓழிப்பு பணிக்காக 300-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
காலை, மாலை இரண்டு வேளையிலும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. யாருக்காவது காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உஷார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.