டெங்கு காய்ச்சல் பாதிப்பு.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மதுரையில் பீதி
டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்குள்ளான 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மதுரை மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மதுரை: அலங்காநல்லூர் அருகில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ளதையடுத்து டெங்கு காய்ச்சலின் தாக்கம் கேரளாவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் டெங்கு பரவத் தொடங்கியது.
குறிப்பாக சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. தினமும் மருத்துவமனைகளுக்கு மர்ம காய்ச்சல் என்று உள்நோயாளிகளாக அனுமதி பெறுவோர் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொங்கு மண்டலத்தைச் சுற்றிக் கொண்டிருந்த டெங்கு இப்போது மதுரைப் பக்கம் திரும்பியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் முடுவார்பட்டி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.
முடுவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 பேருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்து மக்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.