முதல்வரை பார்க்க அனுமதி மறுப்பு.. அப்பல்லோ வாசலில் காரிலேயே காத்திருந்த சுதாகரன் !
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும் சசிகலாவின் அக்காள் மகனுமான வி.என்.சுதாகரன் வாயிற் கதவு முன்பு காரில் அமர்ந்து காத்திருந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி இரவு உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்தவமனை சார்பில் வெளியிடப்படும் அறிக்கை கூறுகின்றது.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும், சசிகலாவின் அக்காள் மகனுமான வி.என்.சுதாகரன் இன்று மாலை 5.55 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
அப்பல்லோவின் கதவு திறக்காததால் காரில் இருந்தபடியே உள்ளே இருந்தவர்களுக்கு செல்போனில் தொடர்புகொண்டார். அரைமணி நேரம் கழித்து எஸ்.எம்.எஸ். மூலம் அனுமதி கேட்டு காத்திருந்தார். 6.55 மணி வரை அனுமதி கிடைக்கவில்லை. அப்பல்லோவின் வாயிற் கதவு முன்பு காரில் அமர்ந்து காத்திருந்த சுதாகரன், விரக்தியுடன் திரும்பிச்சென்றார்.