அந்த அரபிக்கடலோரம்.. காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 'ஜில்' மழைக்கு வாய்ப்பு!
சென்னை: அரபிக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி, நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின், நிலப்பரப்பின் மேல் அடுக்கில் தென் மேற்கு பருவக்காற்று வடகிழக்கு நோக்கி வேகமாகவும், கனமாகவும் வீசுவதால், மேகங்கள் கலைவதுடன், வங்க கடல் பகுதியில் உள்ள ஈரக்காற்று நிலப்பரப்பை நோக்கி வீசுவதில்லை.
நிலப்பரப்பின், மேல் அடுக்கில் வீசும் காற்றின் வேகமும், கடினத்தன்மையும் குறையும்போது, தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழையின் சாரல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும என்றார்.
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக திருவள்ளூரில் 4 செ.மீ மழையும், கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லார், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் சோழிங்கர், நீலகிரி மாவட்டம் தேவலா பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பெங்களூரை பொறுத்தளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சாரல் மழை பெய்து இதமான வானிலை நிலவிவருகிறது.