ஜெயக்குமாரை காமெடி நடிகர் என கூறி பழி தீர்த்த ஓபிஎஸ்!
சிவாஜி கணேசனின் மணி மண்டபம் திறப்பு விழாவில் அமைச்சர் ஜெயக்குமாரை மிகப்பெரிய நகைச்சுவை நடிகர் எனக்கூறி ஓபிஎஸ் பழி தீர்த்துக்கொண்டார்.
சென்னை: சிவாஜி கணேசனின் மணி மண்டபம் திறப்பு விழாவில் அமைச்சர் ஜெயக்குமாரை மிகப்பெரிய நகைச்சுவை நடிகர் எனக்கூறி ஓபிஎஸ் பழி தீர்த்துக்கொண்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 89 வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபம் நேற்று திறக்கப்பட்டது. சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், நாசர், விஷால் சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் சட்டசபை உறுப்பினர் நட்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
கமலுக்கு ரஜினி பதில்
இந்த விழாவில் பேசிய பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களை பழித்தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே பேசிக்கொண்டனர். திமுகவின் பவள விழா மேடையில் தன்னை சாடும் வகையில் பேசிய நடிகர் கமல்ஹாசனை, சிவாஜியின் மணிமண்டப விழா மேடையில் பழித் தீர்த்துக்கொண்டார் ரஜினி.
கமலுக்கு தெரியும்
அரசியலில் வெற்றி பெற சினிமா புகழை தாண்டி வேறொன்று இருப்பதாக கூறிய ரஜினி அது என்னவென்று தனக்கு தெரியாது ஆனால் கமலுக்கு தெரியும். தான் கேட்டால் அதனை அவர் சொல்லமாட்டார் என்றும் 2 மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் ஒருவேலை சொல்லியிருப்பார் என்றும் வாரினார் ரஜினி.
பாட்டுப்பாடிய ஜெயக்குமார்
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் சிவாஜி நடித்த பாடல்களை பாடி கலகலப்பாக பேசினார். அவரை தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
சட்டசபையில் விமர்சித்த அமைச்சர்
அப்போது ஒவ்வொருவரின் பெயரையும் கூறி வரவேற்ற அவர் அமைச்சர் ஜெயக்குமாரை மிகப்பெரிய நகைச்சுவை நடிகர் என குறிப்பிட்டார். அமைச்சர்களும் அரசும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது எதிராக கருத்து தெரிவித்த ஓபிஎஸை, சட்டசபையில் மிகக் கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார்.
ஜெயக்குமாருக்கு ஓபிஎஸ் பதிலடி
ஓபிஎஸ் மிகச்சிறந்த நடிகர் என்றும் அவரது நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என்றும் கூறினார். இந்நிலையில் இதற்கு பழிதீர்க்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் ஜெயக்குமாரை காமெடி நடிகர் என கூறியதாக தெரிகிறது.