ஆமாம், தினகரனைச் சந்தித்தேன்.. ஓ.பிஎஸ் ஒப்புதல்!
Recommended Video
சென்னை: டிடிவி தினகரனைச் சந்தித்தது உண்மைதான் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார்.
தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி கோட்டூர்புரம் இல்லத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டதாக கூறினார்.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் தங்க தமிழ்ச்செல்வனின் பேட்டியை முழுமையாக பார்த்துவிட்டு பேட்டி கொடுக்கிறேன் என்று கூறியிருந்தார்.
ஓபிஎஸ் விளக்கம்
இந்நிலையில் தினகரனை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாக வெளியான தகவல் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.
திட்டமிட்டு குழப்பம்
அப்போது, தினகரன் தாமாக சந்தித்து ஒரு தகவலை பரப்பி வருகிறார். டிடிவி தினகரன் திட்டமிட்டு தங்க தமிழ்ச் செல்வன் மூலம் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார். தங்க தமிழ்ச்செல்வன் மூலமாக குழப்பத்தை ஆரம்பித்துள்ளார் தினகரன் என்றார்.
நல்ல குடும்பத்தில் பிறந்தவன்
மேலும் அவர் பேசியதாவது, தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற விரக்தியில் தினகரன் ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகிறார்.
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்.
அரசியல் பயணம்
எந்த இயக்கத்தில் இருக்கிறோமோ அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எனது அரசியல் பயணத்தை இப்படித்தான் நடத்தி வருகிறேன்.
சந்தித்தது உண்மைதான்
தினகரனை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் ஒருவர் வீட்டில் அவரை சந்தித்தது உண்மைதான் என்றார். மேலும் தினந்தோறும் ஆட்சி கவிழும் என்று தினகரன் கூறிவந்த நிலையில் அவரை சந்தித்தேன் என்றும் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சின்னத்தனமான அரசியல்
அதற்கு அடுத்த மாதம்தான் அதிமுக இணைப்பு நடந்தது. மனம் திருந்தி நல்ல வார்த்தை சொல்லுவார் என்ற நம்பிக்கையில் தினகரனை சந்தித்தேன். ஆனால் அவர் இவ்வளவு சின்னத்தனமான அரசியலை தினகரன் செய்வார் என எதிர்பார்க்கவில்லை என செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.