எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.... சொந்த மண்ணான தேனியிலும் ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட முயற்சியா?
தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் உள்ளடி வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேனி: தேனியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டவும் அவரது செல்வாக்கை குறைத்து வெளிப்படுத்தவும் ஒருதரப்பு முயற்சிப்பதாக அதிமுகவினரே பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நவம்பர் 5-ந் தேதி நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தன்னுடைய சொந்த மாவட்டத்தில் கூட்டம் நடக்க இருப்பதால், பலத்தைக் காட்டும் முடிவில் இருக்கிறார் பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ்ஸை முன்னிலைப்படுத்தவில்லை?
நூற்றாண்டு விழா கூட்டத்தைத் திரட்டும் வகையில், அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி அரசு ஓபிஎஸ்ஸை முன்னிலைப்படுத்தவில்லையே என்ற குரல்களும் தேனி மாவட்டத்தில் எழுந்துள்ளன.
அதிரவைத்த ஓபிஎஸ் ஆதரவாலர்கள்
இதுகுறித்து நம்மிடம் பேசிய தேனி மாவட்ட அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தர்மயுத்தம் நடத்தி வந்தார் ஓபிஎஸ். அந்தக் காலகட்டத்தில் அரசுக்கு எதிராக அவர் இருந்தார். இருப்பினும், மதுரை விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு வரும்போது பெரும் கூட்டத்தைக் காட்டினார். அந்தக் கூட்டம் குறித்து உளவுப்பிரிவு அனுப்பிய தகவல், ஆளும் வட்டாரத்தை அதிர வைத்தது.
டெல்லியில் முறையீடு
இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்த பிறகு, ஓபிஎஸ் எந்த இடத்திலும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர். அரசு தொடர்பாக எந்த முடிவை எடுத்தாலும் ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டும் வேலைகள் நடந்து வந்தன. இதையெல்லாம் கவனித்து வந்த ஓபிஎஸ், நேரடியாக பிரதமரை சந்தித்து நடக்கும் காட்சிகளை விளக்கினார். இதற்கு மறுநாளே முதல்வரும் துணை முதல்வரும் இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வருத்தம்
இந்தநிலையில், தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் ஓபிஎஸ்-ன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு இல்லையென்றால், ஓபிஎஸ்க்கு மனதளவில் கஷ்டத்தைத் தரும். அதற்கான வேலைகளில் சில புல்லுருவிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.